சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது....

Posted by அகத்தீ Labels:





சீதையும் வால்மீகியும் சந்தித்துக் கொண்ட போது....


புராணக் கதாபாத்திரங்களை மறுவாசிப்பு செய்து சிறுகதைகள் படைத்து நம் நெஞ்சைக் கொள்ளை கொண்டு வந்த சுப்பாராவின் முதல் நாவல் இது . அவர் தன்பாணியில் சற்றும் விலகாமல் இந்நாவலையும் படைத்துள்ளார் .பாராட்டுகள்.

புராண பாத்திரங்களை பெண்ணிய நோக்கில் , தலித்திய நோக்கில்என பல கோணங்களில் மறுவாசிப்புச் செய்யும் போது புதிய வெளிச்சம் கிடைக்கும் ; கட்டியமைக்கப்பட்ட புனிதம் நொறுங்கும் .இராமாயணம் படைத்த வால்மீகியும் இராமாயணக் கதாநாயகியும் சந்தித்தால் என்கிற ஒற்றை வரியில்கதையின் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது .வெறுமே கற்பனைச் சரடுகளைஅவிழ்த்துவிடாமல் இராமாயணத்தைக் கூர்ந்து படித்து உள்வாங்கி நுட்பமாய் சில இடைவெளிகளை இட்டு நிரப்பி இராமாயணத்தின் சாதிய , ஆணாதிக்கக் கூறுகளை படம் பிடிக்கிறார் .

இராமனால் துரத்தப்பட்ட சீதை வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கி குழந்தை பெற காத்திருக்கிறார் .இராமகாதையை அரங்கேற்றி நிஷாதகுலத்தில் பிறந்த தான் பிரம்மரிஷி எனப் புகழ்பெற வேண்டும் என்றஅடங்கா வேட்கையுடன் வால்மீகிஇராமகாதையின் ஒவ்வொரு பாத்திரமாக தேடி பேட்டி கண்டுவிவரம் சேகரித்து எழுதிக்கொண்டிருக்கிறார் .

ராமனைப் பேட்டிகாணச் சென்ற வால்மீகியின் அனுபவம் எப்படி இருந்தது ? “ அயோத்தியில் பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சக்கரவர்த்தியின் பேட்டி கிடைக்கவில்லை ……. ரிஷிகளுக்குள்ளும் வர்ணம் பார்க்கிறார்களே! என் மகத்தான கவிதைகளைப் படிக்கும் வரை என்னை நிஷாதனாகத்தானே பார்ப்பார்கள் ....” என சுப்பாராவ் எழுதிச் செல்லும் போது சமூகவிமர்சனம் சாட்டையாய் விழுகிறது .

கதாநாயகனைப் பார்க்க பத்துநாள் காத்திருந்த உங்களுக்கு கதாநாயகியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையே?”என நெத்தியடியாய் சீதை கேட்கும் கேள்வி பெண்சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாய் ஒலிக்கிறது.ராமாயணத்தில் சீதையின் தாயார் பெயர் ஏன் விடுபட்டது ; வளர்ப்புத் தாய் பெயர் ஏன் விடுபட்டது; லட்சுமணனின் தாயார் சுமித்திரையின் பரம்பரை ஏன் சொல்லப்படவில்லை.; இப்படி எழும் ஒவ்வொரு கேள்வியும் மநுவின் முகத்திரையை விலக்கி கோர உருவத்தைக் காட்டுகிறது .

அனுமன் இலங்கையில் சீதையை சந்தித்ததை விவரிக்கும் வால்மீகி ஏன் அனுமன் வாயால் சீதையின் பேரழகை விவரிக்கிறார் ?கட்டைப் பிரமச்சாரிக்கு ஏன் இந்த வேலை ? வாலிவதை குறித்த உரையாடல் இன்னொரு முனையைக் காட்டுகிறது . விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் நடந்த போது ; இராவணனின் மனைவியை கட்டாயப்படுத்தி விபீஷணனின் பட்டத்து ராணியாய் வலம் வரச் செய்யும் இடம்;பெண்களின் வலியை, ரணத்தைஉணராத ஆணாதிக்க முரட்டுத்தனத்தை அடையாளம் காட்டும்.

இப்படி புராண கதாபாத்திரங்களூடே உள் நுழைந்து புதிய சேதிகளை அள்ளிக் கொண்டுவரும் நுட்பம் சுப்பாராவுக்கு மிகவும் கைவரப் பெற்றிருக்கிறது என்பதற்கு இந்நூல் நெடுக நிறைய சாட்சிகள் உண்டு .

நூலின் கிளைமாக்ஸ்தான் சூப்பர்.ராவணனின் மனைவி மண்டோதரியை அங்கதன் தூக்கிக் கொண்டுபோய் பாலியல் வன்கொடுமை புரிகிறான் . இராவணன் தேடிச் சென்று மீட்டு வருகிறான் .ஊரார் அவளை அங்கேயே கொன்றுஎறிந்திருக்க வேண்டும் என தூற்றுகின்றனர் .இராவணன் அவளை ஏற்றுக் கொள்கிறான் . ஆனால் அயோத்தியில் இராமன் என்ன செய்தான் ?தீக்குளிக்கச் சொன்னான் . இந்த இரண்டையும் ஒப்பிட்டு சீதை அசை போடுவது நெற்றியடியாகும் .

சீதையின் எந்தத் திருத்தமும் வால்மீகியால் ஏற்கப்படவில்லை . நாரதர் தலையிட்டு திருத்தங்களை தீக்கிரையாக்கச் செய்துவிட்டார் . அதன் சாம்பல் துகள்களிலிருந்து இந்த நாவல் கிளைத்திருக்கிறது .

இராமனை தேசிய கதாநாயகனாகக் காட்டி மதவெறி தூபம் போடும் இன்றையச் சூழலில் இந்தநாவல் அந்த புனிதப் பூச்சை அழித்துத் துடைக்கிறது .இது இன்றையத் தேவை .

ராஜம் கிருஷ்ணன் எழுதிய , இராமாயணம் குறித்த இரண்டு மறுவாசிப்பு நூல்களும் ;அதுபோன்ற வேறு பல நாவல்களும் சிறுகதைகளும் இப்போது மீண்டும் மீண்டும் வாசிக்கத் தக்கவை.வாசிக்க வேண்டும் .

இந்த நாவலையும் இன்னும் கூர்மையாக்கி பிரளயன் போன்றோர் நெறியாளுகையில் நாடகமாக்கலாமே ! இது என் வேண்டு கோளும் கூட . இந்நாவலில் உரையாடல்கள் தனித்துப் பளிச்சிடும் வகையில் எழுத்துப் பாணியும் கட்டமைப்பும் இருந்திருப்பின் வாசிப்பு சுகம் கூடும் .
எல்லோரும் படிக்க வேண்டிய நூல் இது . சுப்பாராவுக்கு வாழ்த்துக்கள்.

வனபுத்திரி,
ஆசிரியர் : .சுப்பாராவ்,
வெளியீடு :
பாரதி புத்தகாலயம் , 7,இளங்கோ தெரு ,
தேனாம்பேட்டை , சென்னை -– 600 018.
பக்:112 , விலை : ரூ. 80/-


// சு.பொ.அகத்தியலிங்கம் . தீக்கதிர் , புத்தகமேசை 28-02-2016.//