கதை கேளு ! கதை கேளு !

Posted by அகத்தீ Labels:




கதை கேளு ! கதை கேளு !



 கதை கேளு ! கதை கேளு !
கேழ்வரகில் நெய்வடிச்ச
கில்லாடி கதை கேளு !
                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
ஊழலை ஒழிச்ச கதை !
ஊரை ஏய்ச்ச கதை !
                                                    [ கதை கேளு ]


கதை கேளு ! கதை கேளு !
மோடி நடிச்ச கதை !
அதானி இயக்கும் கதை !
                                                    [ கதை கேளு ]


கதை கேளு ! கதை கேளு !
பறந்து பறந்து வளர்ந்த கதை !
சுரங்கத்தை விழுங்கும் கதை !

[ முன்னொரு காலத்திலே மோடி மோடின்னு ஒருத்தரு இருந்தாராம் ; அவரை 25 ஆயிரம் கோடி செலவு பண்ணி கில்லாடி ஆக்கினாராம் பரம எழைகள் அதானியும் அம்பானியும் .. அதற்கு நன்றிக்கடனாய் நாடு நாடாய் பறந்து அவங்க கேட்ட சுரங்கம் , போர்விமானத் தொழிற்சாலை  அப்படின்னு வாங்கிக்கொடுத்து குஷிப்படுத்தினாராம் அந்த கில்லாடி ]

கதை கேளு ! கதை கேளு !
ஆஸ்திரேலிய சுரங்கக் கதை !
அதானி வாங்குனகதை !

                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
ஆறாயிரம் கோடி கதை !
வங்கி கொடுத்த கதை !
[ இப்படி வங்கிப்பணத்தை எடுத்து சுரங்கம் வாங்கிக்கொடுத்தது ஊழலே இல்லை ..வளர்ச்சி .. விஜய மல்லையா மாதிரி வங்கியில பல ஆயிரம் கோடி வாங்கிட்டு மொதாலாளிங்க கட்டலைன்னா அது ஊழல் இல்லே .. அதுக்கு பேரு வளர்ச்சி .. யாருடா அவன் அங்கே கூச்சல் போடுறது .. யாருட்ட கொடுத்தா அவாள் வளருவாங்களோ அவங்களுக்குத்தான் கொடுக்க முடியும் ! ]

                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
அதானி சொத்து பெருத்த கதை !
ஒரே வருடத்திலே 250 சதம் வீங்கின கதை !

கதை கேளு ! கதை கேளு !
அஞ்சே அஞ்சு குஜராத்தி முதாளிங்க கதை!
அவங்க சொத்து இரண்டு மடங்கா ஆன கதை !

                                                    [ கதை கேளு ]

[  ஏழைகள் வளரணும்னா ! நல்லா உழையுங்கோ ! தலமுறை தலமுறையா உழச்சும் பலன் இல்லையா ? உங்க தலை எழுத்து ! பகவான நல்லா ஷேவிச்சுக்குங்கோ ! அடுத்த பிறவியில அதானியா பிறக்கலாம்.. ]

                                                    [ கதை கேளு ]
கதை கேளு ! கதை கேளு !
 அமித் ஷா என்கவுண்டர் கதை !
அவரு விடுதலையான கதை !
                                                    [ கதை கேளு ]


கதை கேளு ! கதை கேளு !
நீதிபதி சதாசிவம் கவர்னர் ஆனகதை !
நீதியை விலைபேசி வாங்கும் கதை !

[ இந்த சதாசிவம் எல்லா நியாயத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு அமித் ஷா நிரபராதின்னு சொன்னார் அதுக்கும் கவர்னர் பதவிக்கும் உங்க அம்மா சத்தியமாய் சம்மந்தமே இல்லையாம் ! ]
                                                    [ கதை கேளு ]

கதைகேளு ! கதை கேளு 1
அருண் ஜெட்லி ஜெயா பார்த்த கதை!
வருமான வழக்கு முடிஞ்ச கதை !
                                                    [ கதை கேளு ]

கதை கேளு ! கதை கேளு !
குமாரசாமி கணக்கு போட்ட கதை !
ஜெயா விடுதலை ஆன கதை !

கதைகேளு ! கதை கேளு !
21 டன் நிலக்கரிய ஜெ ஆட்சி வாங்கும் கதை !
அதானி ஒப்பந்தம் போட்ட கதை !
[ தமிழ் நாடு மின்சார வாரியத்துக்கு அதானியிடம் 21 லட்சம் டன் நிலக்கரி வாங்கப் போறாங்க ! அதானி வேறு மோடி வேறு ! தெரியாமல் உளறக்கூடாது ! நன்றிக் கடன்னு சொல்லி வழக்கு விடுதலைக்கும் இதுக்கும் முடிச்சுப் போடக்கூடாது ..]
                                                    [ கதை கேளு ]
இப்படியே கதை சொல்ல சொல்ல நீளும் ! இது என்ன வைகுண்ட ஏகாதேசியா ? சிவராத்திரியா எழுந்து போங்க !
                                                     [ கதை கேளு ]


- சு.பொ.அகத்தியலிங்கம்






விதி எனப்படுவது....

Posted by அகத்தீ Labels:




விதி எனப்படுவது ..

சு.பொ.அகத்தியலிங்கம்.

எல்லாம் எல்லாம்
எல்லாமும்
சரியாய்த்தான் போய்க்கொண்டிருக்கிறது !


எத்தனை முறை
நீ கூப்பாடு போட்டாலும்
ஆகப்போவது ஒன்றுமில்லை!


எதை யாருக்கு எப்போது
எப்படி வழங்க வேண்டுமோ
அப்படித்தான் வழங்கப்பட்டிருக்கிறது !


நீயாக கற்பனைசெய்துகொண்டு
நீதி, நிர்வாகம் , அதிகாரம் , ஊடகம்
எல்லாம் பொதுவானது என்றால்
அதற்கு அவர்களா பொறுப்பு!


ஆதிமுதல் இந்த நொடிவரை
ஏன் நாளையும் அதற்கு அடுத்தநாளும்கூட
அவர்களுடையதே !


ஜெர்மானிய தாடிக்காரக் கிழவன் சொன்ன
அரசியல் அரிச்சுவடியை அறியாதவரை
நீ ஏமாளியே
நேற்றும் இன்றும் நாளையும்
நீ ஏமாளியே !


நீ விழித்தெழாமலிருக்க
உன்னை மயக்கும் கலை
அவர்களுக்கு  அத்துப்படி !


உன்னை மிதித்துத் துவைப்பவர்களை
நீயே தோளில் சுமந்து
கோட்டைக்கு கொண்டு செல்வாய் !


உனக்கு அனுக்கிரகம் ஒருபோதும் வழங்காத
தெய்வங்களிடம் நீ மண்டியிடுவாய் !
அனுக்கிரகம் அனைத்தையும் அவர்களுக்கே
வழங்கி உன்னை இழிச்சவாயனாக்கினும்
ஒருபோதும் நீ உணரமாட்டாய் !


எதிரியை நண்பனென்கிறாய்
வில்லனை நாயகனாய் கொண்டாடுகிறாய்!
உயிரைப் போக்கிக் கொள்வதுமடுமா தற்கொலை ?


ஆயினும், நம்பிக்கையோடு
ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் கவிதை ஒன்றை
சமர்பிக்கிறேன்;
உருது எனக்குத் தெரியாதெனினும்
ப.கு.ராஜனின் தமிழாக்கத்திலிருந்து ;

 “அதிகாரத்திலிருப்போர் அனைவருக்கும் எச்சரிக்கை
உங்கள் செயல்பாட்டைத் திரும்பிப்பார்ப்பீர்
பழிக்கு பழியென
மக்கள் திரள் வீதிக்கு வரும்போது
உங்கள் கருணை மனுக்களும்
மன்னிப்புப் பிதற்றல்களும்
புறங்கையால் ஒதுக்கப்படும்
நண்பர்களின் செல்வாக்கும்
காப்பாளர்களின் உதவியும் பயனற்றுப் போகும்”

இன்குலாப் ஜிந்தாபாத்!





வசவும் வதையும் வாழ்க்கையாகிப் போனபின்...

Posted by அகத்தீ Labels:





வசவும் வதையும் 
வாழ்க்கையாகிப் போனபின்...

சு.பொ.அகத்தியலிங்கம்




ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்
ஆசிரியர் : கலைவாணன் இ.எம்.எஸ்
வெளியீடு : கீற்று வெளியீட்டகம் ,
1/47 A அழகியமண்டபம் ,
முளகுமூடு அஞ்சல்,
குமரி மாவட்டம் – 629 167 .



 “ குனிந்திருந்து 
 கீழ் பார்த்து  தொங்கும் 
 கொட்டை மயிருகளை 
அரைகுறையாக 
வெட்டித் தள்ளுவது போல் 
 அல்லாமல் 
கண்ணாடியில் முகம் பார்த்து 
கம்பீரமான முறுக்கு மீசை 
மேல் நோக்கி நிற்பதற்கு 
கத்தரிப்பது போல் 
உங்கள்  கவனத்தை 
வேண்டி நிற்கிறது 
இப்பதிவு” 

இந்த முன்னறிவிப்பே வலியையும் , விடுதலை வேட்கையையும் ஒருங்கே பிரகடனப் படுத்துகிறது .

அண்மையில் ,  “லண்டாய்” எனும் ஆப்கன் பெண்கவிஞர்களின் கவிதை தொகுப்பை –மொழிபெயர்ப்பாக படித்தபோது அதிர்ந்தேன்  . கவிதை என்பது கைவாளென கவிஞர் கே சி எஸ் அருணாச்சலம் சொன்னது மெய்யே என உணர்ந்தேன் . அடுத்து    “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” என்னை உலுக்கி எடுத்துவிட்டது .தன் சாதிய சமூகத்தை குறுக்கு வெட்டுத் தோற்றமாய் அவர் பிளந்து காட்டிவிட்டார் . 

“ பண்டிதன் 
முண்டிதன் 
இங்கிதன் 
சங்கிதன் 
நால்விதன் தெரிந்தவனே 
நாவிதன் 
வேறு எவனுக்கும் 
இல்லை இவை” 


என்கிற பெயரின் காரணக்குறிப்பு கற்பிதம் அல்ல .இருந்த நிலையையும் இழந்த நிலையையும் ஒரு சேரச் சொல்வது ,பண்டுதமெனில் மருத்துவம் , முண்டுதமெனில் சவரம் , இங்கிதமெனில் சவரக் கலைகள் , சங்கீதமெனில் இசையும் கலையும் இப்படி பொருள் விளக்க கவிஞர் குறிப்பு தந்ததோடு நில்லாமல்  ;நாலு நிலையிலும் நாவிதர் பட்ட பாட்டை நாஞ்சில் தமிழோடும் - நாஞ்சில் நாட்டு சடங்கு முறைகளோடும் - நரம்பில் விஷமாய் உறைந்து போயுள்ள சாதியநோயினைக் கீறியும் காட்சிப்படுத்தியுள்ளார் .


 “ தொட்டிலில் கிடக்கும் என்னை / சலூனில் / வேலை முடித்துவந்த அப்பா / முத்தமிட்ட கன்னப்பரப்பில் / இரண்டு மூண்று வெள்ளை முடிகள் / ஒட்டியிருக்கின்றன / எந்த ஜாதிக் காரனின் / அழுக்கு மயிரோ” அன்பையும் சமூகவலியையும் பிழியும் வரிகள் இவை . இதைவிட கவிதைக்கு என்ன இலக்கண வரம்பு வேண்டும் ? . 


ஒரு கலயாண வீட்டில் தானும் தாயும் அவமானப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டதை  ,  “இப்பவே யாம்புலே இருந்தியன்னு  /  சோறு விளம்புன ஒருத்தன் / ஓடுங்கல நாசுவத் தாயாளின்னு / எழுப்பி விட்டான் / என்னையும் என் அம்மையும்” என சொல்லிச் செல்லும் கவிதை இந்துபெருமிதத்தின் நெற்றில் பொட்டில் அறைகிறது . 


சுசீந்திரம் காவடி மடத்தில் நான் விரும்பி அழைத்துச் சென்ற என சிநேகிதன் களக்காடு பாலச்சந்திரனை [ வண்டி ஏறி முதுகொடிந்து பின்னர் இறந்து விட்டவன் ] பாதி சாப்பிடும்போது எவண்டா பறதாயளி பயலுகளை உள்ள விட்டதுன்னு ஒற்றைக்கையைப் பிடித்து என் தாய்மாமா தரதரன்னு வெளியே வீச – நானும் கோபித்துக்கொண்டு வெளியேறிய அந்தநாள் என்னுள் இன்னும் உறைந்து போயுள்ளது . எட்டாவதோ ஒன்பதாவதோ படிக்கிற காலம் அது  . அன்று என்னுள் விழுந்த சமூகக்கோபவிதை இன்னும் ஆறவில்லை . இக்கவிதை மேலும் விசிறிவிடுகிறது .


 யார்யாருக்கோ தப்பான கர்ப்பத்தை கலைக்க உதவிய அம்மா – ஊர் பெண்கள்  சமஞ்சதுக்கெல்லாம் சடங்கு சுற்றி தீட்டுக்களித்த அம்மா -  என விவரமாகச் சேதி சொல்லும் ஒரு கவிதை இறுதியில் “ அக்கா பிராயத்துக்கு வந்ததை / யாருக்கிட்டேயும் சொல்லல” என்கிற வரிகளில் வெளிப்படுத்துவதுவது வெறும் பெருமூச்சு மட்டுமா ? 

 “ ஊரு மருத்துவச்சியாக / அம்மா பிரசவம் பார்த்து / பூச்சு பறக்கிப் போட்ட /எல்லா குந்திராண்டங்களும் / இப்ப வளர்ந்து / பூதங்களாத் தொங்குது” அடேயப்பா உயிர் கொல்லும் வரிகள் ! பாரம்பரிய இந்திய , தமிழக மருத்துவ ஞானம் மங்கியது ஏன் ? மேற்கு ஓங்கியது ஏன் ? விடையை சொல்லுது இக்கவிதை .


கவிஞர் தன் சுயசாதியின் இதயத்து வலியை – சிதைவை – சமூக அவலத்தை – அதிலிருந்து தப்பி ஓட செய்யும் சாகசங்களை சொல்லும் வார்த்தைகள் சவரக்கத்தியைவிட கூர்மையாய் நம் நெஞ்சுக்குள்ளே இறங்குகிறது . 


அக்கா சாதியை மறைத்து வாழுவதை பேசும் ஒரு கவிதையில் அவர் குமுற்கிறார் … “ அவ அம்மைக்கு / ஆயிரம் மாப்பிள்ளைன்னு  /சொல்லட்டு / அவளுக்க தம்பி பொண்டாட்டி / ஓடிப் போயிட்டான்னு  /சொல்லட்டு ” ஆம் இவை எல்லாம் கூட இழிவில்லையாம் ஆனால் எதைச் சொல்லக்கூடாதாம் கடைவரியாய் சுளீரென விழுகிறது , “ அவ நாசுவத்தின்னு மட்டும் / சொல்லாம இருந்தாப் போதும்”


  “ பிச்சையெடுத்தாலும் /பார்பர் ஷாப் வேலைக்கு /போக கூடாதுன்னு / சொல்லிட்டா அம்மா”  அதற்காக்காக லாரி கிளீனரா  போனபின் கிடைத்த அனுபவம் என்ன தெரியுமா ? “நான் குளிச்ச பொறவு / நீ குளில நாசுவத் தாயளின்னுட்டு / சோப்பு நுரையோடு / என்னை வெளியே வரச்சொல்லி / டிரைவர் குளிக்கப் போனான்” சுய அனுபவமும் சுயசாதி ரணமும் நூல் நெடுக வார்த்தைகளாய் நம்மைப் புரட்டிப் போடுகின்றன . வசவுச் சொற்கள் கவிதையாகுமா ? என சில சுயம்புகள் கேட்கக்கூடும் ! வசவும் வதையுமே வாழ்க்கையாகிப் போனபின் அதைக் கவிதையில் கூறிட வேறென்ன வார்த்தை மயிரிருக்கு ?


பொன்னீலனின் முன்னுரைக் கவிதையும் , நட . சிவகுமாரின் பின்னுரையும் கட்டாயம் படித்தாக வேண்டும் .


 “ கலைவாணன் புதிய கவிதை மொழியோடு அறிந்த மனிதர்களின் அறியாத பக்கங்களை வாசிக்கும்படி வைத்திருக்கிறான்” என நட . சிவகுமாரின் கணிப்பை நான் மட்டுமல்ல கவிதைத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்வர் .


இந்து ஒற்றுமை பேசும் மதவெறிக்கூட்டம் என்ன புனுகு பூசினாலும் மறைக்க முடியாமல் அழுகி நாறும் சாதிய ரணத்தின் ஸ்கேன் பதிவு இது ..

[ பிப் 26 அன்று எழுதியது . அன்றே செம்மலருக்கு அனுப்பியது . இனி பிரசுரமாகக்கூடும் ]

இயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை ஒப்புக்கொண்டால் என்ன?

Posted by அகத்தீ Labels:








இயற்கையை மீறி ஒரு சக்தி இருப்பதை
ஒப்புக்கொண்டால் என்ன?

சு.பொ. அகத்தியலிங்கம்


·         நம்மை மீறி ஒரு இயற்கை சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில்அதை நம்புவதில்வழிபடுவதில் - உங்களுக்கு என்ன கஷ்டம் ?

·         உலகில் யாருமே நாத்திகரில்லை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்என்பது சரியா ? ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா? இல்லாத ஒன்றெனில் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா ?

·         கிறுத்துவர் பைபிளை படிக்கிறார் ; முஸ்லீம் குரானைப் படிக்கிறார் ; இந்துக்கள் கீதையைப் படித்தால் என்ன ?

·         பண்பாடு என்பது மதம் சார்ந்ததுதானே! மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம்? அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பியரும் கிறுத்துவப் பண்பாட்டையன்றோ பிரதிபலிக்கின்றனர்?

·         தமிழர் சமயம் இந்து மதம்தான் என்று சொல்வதில் என்ன பிழை ?தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் ? தமிழக அரசர்கள் எல்லொரும் இந்துக் கோயில்தானே கட்டினர் ?

தத்துவ உலகில் விவாதம் முடிவற்றது ; விடை காணாத கேள்விகளை நோக்கியப் பயணத்தில் அவரவர் அனுபவம் ,அறிவு  சார்ந்து தேடல் தொடரவே செய்யும். நாமும் தத்துவ உலகில் சஞ்சரிக்க விழைந்தாலும் அன்றாடம் குறுக்க மறுக்க தடுத்து வீசும்கேள்விகளை எதிர்கொள்வது தத்துவத் தேடலுக்கு முன்பயிற்சி ஆகிறது.  நம் இலக்கு சரியான தத்துவத்தை அடையாளம் காண முயல்வதே !


நம்மை மீறி ஒரு இயற்கை சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்வதில்அதை நம்புவதில்வழிபடுவதில்  உங்களுக்கு என்ன கஷ்டம் ?

இயற்கை சக்தி என்று சொல்லி விட்டீர்கள்! இதிலொன்று பகுத்தறிவாளர் மாறுபடுவதில்லையே ! அதனை இறைவனாக கருதி சரணடைவதில்தான்வழிபடுவதில்தான் மாறுபடுகிறோம் . ஆதி நாத்திகர்கள் அதாவது லொகாயவாதிகள் அல்லது பூதவாதிகள் கூட உலகம் பஞ்சபூதங்களினால் ஆனது என்பதை ஒப்புக்கொண்டவர்களே . நிலம் , நீர் , நெருப்பு,காற்று , ஆகாயம் என பஞ்ச பூதங்கள் ஐந்தென வகுத்தனர் .அன்றைய அறிவியல் புரிதலுக்கு உட்பட்டு அவ்வாறு அவர்கள் முடிவுக்கு வந்ததே மிகப்பெரிய முன்னேற்றமே .
பின்னர் வேதியல் புரட்சி ஏற்பட்ட போது லாவோசியர் , ஜோசப் பிரீஸ்ட்லி முதலியோர் நெருப்பு என்பது வெறும் வினை; அடிப்படைப் பொருளல்ல என நிறுவினர் .காற்று என்பது ஆக்ஸிஜன் , னைட்ரஜன் ,கார்பன் என வாயுக்களின் கலவை எனக் கண்டனர். நீரென்பது ஹெச் டூ 2 டீ ] என கண்டு தெளிந்தனர் அதாவது ஹைட்ரஜன் இரண்டுபங்கும் ஆக்சிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால் நீர் . இரத்தம் , சதை , சிமெண்ட் , கல் , மண்  என எல்லாமே மூலக்கூறுகளின் கலவைதான் என அறிவியல் கண்டது .
இந்த மூலக்கூறுகள் அடிப்படையில் அணுக்களால் ஆனவை . தங்கம் , இரும்பு , சோடியம் , யுரேனியம்  முதலிய 119 வகை அணுக்கள் - தனிமங்கள் உள்ளன . இதில் 96 வகை தனிமங்கள் பூமியில் இயற்கையில் கிடைக்கும் . அணுவே கடைசி கண்ணி - அதைப் பிளக்க முடியாதென்பது டால்டன் கொள்கை. அடுத்த கட்டத்தில் ரூதர் போர்டு, ஜே.ஜே. தாமஸ் முதலானோர் அணுவைப் பிளந்து ஆராய்ந்து எலக்ட்ரான் , புரோட்டான் ,நியூட்ரான் மற்றும் நியூட்ரினோ ,மியூவான், மியூமிசான் என்கிற அணுத்துகள்களே  அடிப்படை அலகு என்பதைக் கண்டு சொன்னார்கள் . அந்த எலக்ட்ரான்தான் இன்றைய கணினிப் புரட்சியின் அடித்தளம் . அதனையும் உடைத்து குவார்க்குகள், க்ளுவான்ஸ்கள் என ஆய்வு முன்னேறுகிறது .
நியூட்ரினோதான் உலகெங்கும் நிறைதுள்ள துகளெனக் கண்டு அதனை ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர் . தமிழகத்தில் தேனியில் அமையும் நியூட்டிரினோ நோக்குகூடம் அத்தகையதே . ஆக இயற்கயை வழிபட்டு சரணடைதிருந்தால் இவ்வளவு கண்டுபிடிப்புகளை செய்திருக்க இயலுமா ?பகுத்தறிவு மேலும் விசாலமாக - மேலும் கூர்மையாக முன்னேறுகிறது.
கணினி முன் உட்கார்ந்து கொண்டு மதவெறிப் பிரச்சாரம் செய்வபவரும் இந்த அறிவியலின் பலன் மீது நின்று கொண்டன்றோ செயல்படுகிறார்கள். இது ஒரு புறம் இருக்கட்டும் ! எல்லாம்வல்ல ஒரே இயற்கை சக்தியே இறைவனெனில் இத்தனை மதங்கள் ஏன் ? இத்தனை கடவுள்கள் ஏன் ? இவ்வளவு மதவெறிச் சண்டைகள் ஏன் ? இத்தனை மனித உயிர்களை காவு கொடுப்பது ஏன் ? நீங்கள் சொல்லுகிற அந்த ஒற்றைக் கடவுள் எந்த மதம் சொல்லுங்கள் !!!


உலகில் யாருமே நாத்திகரில்லை ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தங்கள் வழியில் கடவுளை நம்புகிறார்கள்என்பது சரியா? ஆத்திகர் கடவுளை நம்புகிறார் ஆனால் கடவுளைப் பற்றி அதிகம் பேசுவது நாத்திகரல்லவா? இல்லாத ஒன்றெனில் பேசிக்கொண்டே இருக்கவேண்டுமா?


 “கடவுள் கவலை எனக்கில்லைஎன்பார் பாரதிதாசன். “கடவுள் இருக்கு என்பதும் இல்லை என்பதும் கவைக்கிதவாத வெறும் பேச்சு / கஞ்சிக்கில்லாதவன் கதை நூறிருக்கு அதை நீ பேசுஎன்பார் பட்டுக்கோட்டையும் . நாமும் அதையே விழைகிறோம் . ஆயினும் ஆத்திகர் கேள்வி எம்மை அது பற்றி பேச வைக்கிறது .
கேள்வியில் முன்வைக்கும்  வாதம் புதிதல்ல . பண்டைய இந்தியாவில் உதயணர் எனும் ஒரு தத்துவவாதி இருந்தார் . அவர் கடவுள் உண்டென நிரூபிக்க முயலும்நியாயம்என்ற தத்துவப் பிரிவைச் சார்ந்தவர் . அவருடையநியாயகுஸிமாஞ்சலிஎன்ற நூலைத்தான் ஆத்திகர்கள்கடவுளைநிரூபிக்கத் துணையாகக் கொள்கிறார்கள். அவரும் இந்த கேள்வியில் கேட்கப்பட்டதை அதே வார்த்தைகளில் தன் வாதமாக முன்வைத்தார். அதற்கு ஆதாரமாக லொகாயாவாதிகள் சிலரின் வார்த்தைகளை திருத்தி தன் வாதத்துக்கு பயன்படுத்த முயன்றார் . டாக்டர் ராதாகிருஷ்ணன் கூட கம்யூனிசமும் ஒரு மதமே என வாதம் செய்தார் . இது பட்டிமன்ற வாதம் போல் இருக்கிறது .
கடவுளை நம்பாதவர்களை மட்டிலுமே நாத்திகரென பகுத்தறிவாளர் வரையறை செய்கின்றனர்; அதுவே சரியானது .ஆனால் இஸ்லாம் மதம் அல்லாவை ஏற்காத பிறமதத்தவர் உட்பட எல்லொரையும்  நாத்திகரென்று கூறும் ; சனாதன பிராமண மதம் வேதத்தை ஏற்க மறுத்தாலே நாத்திகரென வசைபாடும் . கிருத்துவமும் பிறமத்ததவரை நாத்திகரென்றே கணிக்கும் .இப்படி இவர்களின் வெறுப்பு அளவுகோலால் பிறமத நம்பிக்கையாளரை நாத்திகரென்பதால் மேலே கேள்வியில் ஏற்பட்ட குழப்பம் ஏற்படுகிறது . எந்த மதத்தையும் எந்தக் கடவுளையும் ஏற்காதவரே நாத்திகர் . இதனை உணர்ந்தால்  குழப்பமே இல்லை . எந்தவழியில் கடவுளை நம்பிடினும் அவர் நாத்திகரில்லை
ஆத்திகரென்பவர் கடவுள் பெயரால் பல சடங்குகள் சம்பிரதாயங்கள் மூடநம்பிக்கைகள்  என மூழ்கிக் கிடக்கின்றனர் ;அதை மறைக்கவே நாத்திகர் கடவுள் பற்றி அதிகம் பேசுவதாகக் பழி போட்டுதப்பிக்க முயல்கின்றனர்; புற்றுநோயில் விழுந்துகிடப்பவனைவிட ; புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை விதைக்கிறவர்தான் அதிகம் பேசவேண்டும் .பேசமுடியும் . இது விழிப்புணர்வுக்கான பேச்சு. இதனையெல்லாம் தெரிந்து கொண்டே திசை திருப்பும் விதமாக சாமர்த்தியமாக ஆத்திகவாதிகள் இப்படி சொற்போராட்டம் நடத்துவது நெடுங்காலமாக நடந்து வருகிறது . இதனை தத்துவ வாதத்தில்  ‘ சாமன்ய சளாஅல்லதுசாமான்ய சாலம்என்பர் புரிகிறமாதிரி சொவதானால்அறிவியல் அயோக்கியத்தனம்என்கிறார்  ஆய்வாளர் நா. வானமாமலை .
கடவுள் என்பது இல்லாததே ; அதை இருக்குதென மற்றவர் பேசும்வரை மறுத்துப் பேசுவது இயல்பானதே . தேவையானதே !  தொலைகாட்சியில் ஒரு ஆன்மீகப் பேச்சாளர் மினசாரத்தை கண்ணால் பார்க்கமுடிவதில்லை என்பதால் மின்சாரம் இல்லை என்று சொல்லமுடியுமா ? அது போலத்தான் கடவுளும் என்றார் ? மின்சாரம் இருப்பதை விளக்கு எரிவதைக் கொண்டு அறியலாம் ; தொட்டுப் பார்த்தால் ஷாக் அடிக்கும் . மின்சாரத்தை உண்டாக்க முடியும்  ? எங்கே எப்படி உண்டாக்கப்பட்டது என்கிற விவரம் உண்டு ? கடவுளை உண்டாக்கிக் காட்டுங்கள்  என சவால் விடலாமே ! இப்படி இடக்கு மடக்கு வாதம் பயனில்லை . நாத்திகரைப் பொறுத்தவரை கடவுள் இல்லை . ஏனெனில் அறிவியல் பூர்வமாக இதுவரை கடவுள் இருப்பதாக நிரூபிக்கப்படவில்லை . அவ்வளவே !


கிறுத்துவர் பைபிளை படிக்கிறார் ; முஸ்லீம் குரானைப் படிக்கிறார் ; இந்துக்கள் கீதையைப் படித்தால் என்ன?


எதையும் படிக்கக்கூடாதென அறிவியலாளர் தடை போடமாட்டார் . நான் மூன்றையும் படித்திருக்கிறேன் . மூன்று நூலையும் வைத்திருக்கிறேன் .  “ கீதை தரும் மயக்கம்என்றொரு நூலும் எழுதியிருக்கிறேன் .எல்லொரும் அவரவர் மதம் சார்ந்த நூலை மட்டுமல்ல ; பிற நூல்களையும் படியுங்கள் . தடையே இல்லை . ஆனால் அவற்றில் சொல்லப்பட்டிருப்பவற்றை அறிவியல் கல்லில் உரசி உண்மையை உணருங்கள்
சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்அதாவது நாலு வருணங்களை நானே படைத்தேன் என்றும், ஒரிடத்தில் குண அடிப்படையில் வர்ணம் என்பேசி விட்டு அடுத்து குலதொழிலை அதாவது பிராமணர் வேதம் ஓதுவதும் சக்கிலியர் மதம் அள்ளுவதும் அவரவர்க்கு விதிக்கப்பட்ட கடமை; அதைச் செய்வதே உயர்வானது என்றும் சாதிச் சேற்றில் அழுத்துவதே கீதையின் சாரம் .
பெண் பாவயோனியில் பிறந்தவரென பெண்களை இழிவு படுத்துவது கீதை . இன்னும் பல சொல்ல முடியும் . ஆகவே சாதியையும் பெண்ணடிமைத்தனதையும் போதிக்கும் நூலே கீதை என்பதை நினைவில் கொள்வீர் !. இப்போதும் படிக்காதே என எந்த நூலையும் தடுப்பது தவறு. எந்த நூலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதநூலென்பதையும் ஏற்க இயலாது.கீதையையும் படியுங்கள் அதனை விமர்சித்து எழுதியவற்றையும் படியுங்கள் . இதனையே அனைத்து மத நூல்களுக்கும் -ஆம் குரானுக்கும் பைபிளுக்கும்  சேர்த்தே சொல்கிறோம் .  நீங்களே முடிவெடுங்கள் .


    பண்பாடு என்பது மதம் சார்ந்ததுதானே! மதத்தைத் துறந்தால் நமக்கேது பண்பாட்டு அடையாளம்? அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பியரும் கிறுத்துவப் பண்பாட்டையன்றோ பிரதிபலிக்கின்றனர்?


பண்பாட்டில் மதக்கூறுகள்  உண்டு. ஆயினும் பண்பாடு முழுவதும் மதம் சார்ந்ததல்ல . இன்றைக்கு சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு சற்று முன்னரே மதங்கள்  வேரூன்றத் துவங்கின . சுமார் ஐம்பது லட்சம் வருட வரலாறு கொண்ட மனித இனத்தின் வரலாற்றில் மதம் வருவதற்கு முன்பே பண்பாடு கருக்கொள்ளத்துவங்கிவிட்டது . அந்தந்த புவியல் , தடபவெப்பம் மற்றும் இயற்கை சூழல் சார்ந்தும் அவர்கள் உற்பத்திமுறைசார்ந்தும் வடிவம் கொண்டதே பண்பாடு . எதை உண்ணுவது, எதை உடுத்துவது, எந்தக் கருவியை உபயோகிப்பது, எதை எப்படி உற்பத்தி செய்வது என்பதையெல்லாம் மதமா முடிவெடுத்தது ?
இல்லை அவனுடைய வாழ்க்கைச் சூழல் எது கிடைத்ததோ, எது அவனுக்கு உகந்ததோ அதை பரிசோதித்து , பரிசோதித்து  பழக்கப்படுத்தினான் . ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இயற்கையோடு மல்லுக்கட்டி மல்லுக்கட்டி தனகென சில வாழ்க்கை முறைகளை வார்த்தெடுத்தான் . அவையே பண்பாட்டின் அடித்தளமானது .எந்தெந்த மதம் எந்தெந்த நாட்டில் தோன்றியதோ அந்தந்த நாட்டின் பண்பாட்டையும் சூழலையும் உள்வாங்கியே பிறந்தன . கிருத்துவமும் அப்படியே ! பிராமண சனதன மதமும் அப்படியே !ஆயினும் மதம் சுரண்டும் வர்க்கத்தின் கேடயமாக மாறியபின்மதம் பண்பாட்டில் ஆதிக்கம் செலுத்தியது . ஏனெனில் மக்களை அடக்குமுறை மூலம் அடக்குவதைத் தவிர பண்பாட்டின் மூலம் முடக்குவதே வலுவான வழி என ஆளும் வர்க்கம் கண்டு கொண்டது . மதம் பண்பாட்டை தன் நோக்கங்களுக்கு ஏற்ப பயன்படுத்தின - விளக்கம் அளித்தன . எங்கும் இதுவே நடந்தது.
ஆகவே அறிவியல் முன்னேற்றம் கண்ட ஐரோப்பாவின் பண்பாட்டிலும் மதத்தின் சார்பு நிறையவே உண்டு . எனினும் ஐரோப்பிய மறுமலர்ச்சியும் , பிரெஞ்சுப் புரட்சியும் , அமெரிக்க விடுதலைப் போரும் , ரஷ்ய , சீனப் புரட்சிகளும் உருவாக்கிய தாக்கமும் ; அறிவியல் வளர்ச்சியின் தாக்கமும் சுதந்திரம்ஜனநாயகம்சமத்துவம் என்பவை பண்பாட்டிலும் பிரதிபலித்தன .அதன் எதிரொலிதான் மதச்சார்பின்மை எனும் உயர் சிந்தனை மேலைநாடுகளில் வலுவாக பேசப்படலாயின.கிறுத்துவம் ஐரோப்பிய சிந்தனைகளில் பண்பாட்டில் விரவி இருப்பினும் அங்கே அறிவியல் முன்னேற்றம் காணும் சூழலும்  அடித்தள மக்களின் பண்பாட்டு எழுச்சிக்கான விதையும்  வரலாற்று ரீதியாக கருக்கொண்டது .ஆளும் வர்க்கம் எப்போதும் மதத்தை தூக்கிப் பிடிப்பது இயல்பு . அதில் எந்த நாடும் விலக்கல்ல . மேலை நாடும் விலக்கல்ல
பண்பாடு என்பது எப்போதும் மேட்டுக்குடியின் பண்பாட்டையே சார்ந்தது போன்று தோற்றம் ஏற்படுத்தப்பபடுவதுண்டு .ஆயினும் அனைத்தையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களின் பண்பாடு மேலொங்கி எழும் . இதற்கு இந்தியாவும் விலக்கல்ல ; மேலைநாடும் விலக்கல்ல . மேலை நாட்டுப் பண்பாடெல்லாம் கீழானவையும் அல்ல ; இந்தியப் பண்பாடெல்லாம் மேலானவையும் அல்ல . மேற்கானாலும் நம் சொந்தப் பண்பாடாயினும் மேட்டிக்குடி பண்பாடாயினும் ஒடுக்கப்பட்டோர் பன்பாடாயினும் நல்லதும் உண்டு , தீயதும் உண்டு . அதில் உள்ள  பழுதான அம்சங்களை துடைத்தெறிந்து விட்டு நல்லகூறுகளை சமத்துவக் கூறுகளை முன்னெடுப்பதே மானுடத்துக்கு உகந்தது .


தமிழர் சமயம் இந்து மதம்தான் என்று சொல்வதில் என்ன பிழை ?தமிழர் போகும் இடமெல்லாம் இந்துக் கோயில்களை அல்லவா நிறுவினர் ? தமிழக அரசர்கள் எல்லோரும் இந்து கோயில்தானே கட்டினர்?


 “ பிறப்பொக்கும் எல்லா உயிக்கும்என்பதும் ; “ எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..” என்பதுமே தமிழர் சமயத்தின் அடிநாதமாகும் . மதம் என்ற சொல்லே தமிழுக்கு வெகு தாமதமாக வந்த சொல்தான் . சமயம் என்ற சொல்லே தமிழர் வரலாற்றோடு இணைந்தது . நமது அகப் பாடல்களும் புறப்பாடல்களும் பெரிதும் இயற்கை சார்ந்து யதார்த்த வாழ்வினிலிருந்தே பேசுகிறது. எடுத்துக்காட்டாக புறநானூற்றில் குடபுலவியனார் எழுதிய பாடல் இடம் பெற்றுள்ளது :
 “ நீர் இன்று அமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்
உனவெனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர்
ஈண்டு உடம்பும் உயிரும் படைத்த சினோரே”  
-இந்த பாடல் வரிகளை சுட்டி பேராசிரியர் அருணன் தொடர்கிறார் , “பாண்டிய நாட்டின் மேற்குப் பகுதியில் வாழ்ந்த இந்தப்புலவர்அங்கே வறட்சியையும் வறுமையையும், அதனால் ஏற்பட்ட நோவையும் சாவையும் கண்ணாறக் கண்டு நொந்து போனார். ஆனால் இதற்குக் காரணம் விதி என்றோ முன் வினைப் பயன் என்றோ வாளாயிருக்கவில்லை . நேரே மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் வருகிறார். ‘ நீர் நிலை பெருகஏற்பாடு செய்யுமாறு கூறவருகிறார் … ….அரசரிடம் புலவர் தத்துவம்  போதிக்கிறார்உண்டி முதற்றே உணவின் பிண்டம்என்கிறார் .இந்த உடம்பு தற்காலிகமாகஆன்மாவாசம் செய்யும் இல்லம் என்று சொல்லவில்லை . மாறாக உணவு என்கிற பருப்பொருளால் ஆனது இந்த உடம்பு என்று இயற்கைவழி பேசுகிறார்….நீரின் முக்கியத்துவத்தைச் சொல்லி நீர் நிலையைப் பெருக்கச் சொல்கிறார்இத்தகைய இயற்கை தத்துவமே தமிழரின் ஆதிமரபில் இருந்தது”  என  தன் நூலில் அருணன் நிறுவுகிறார்
நீலகேசியும் , மணிமேகலையும் விவாதித்த தத்துவ களம் மிகப்பெரிது .பரந்து விரிந்தது . தமிழர் தத்துவ மரபு பெரிதும் வர்ணாஸ்ரம எதிர்ப்பு மரபே .” கி.பி. ஆறாம் நூற்றாண்டு பக்தி இயக்கத்தின் துவக்க காலம் எனில் அதுவே தமிழக வரலாற்றிலும் ஒரு திருப்புமுணையாக அமைந்தது .தத்துவ வளர்ச்சி இறையியல் என்ற சிறைக்குள் அடைக்கப்பட்டு பின்னடைவைக் கண்டது . ஆனமிகம் மட்டுமே தத்துவம் என்ற மயக்கம் ஏற்படுத்தப்பட்டு சமணம் , உலகாயுதம் போன்ற தத்துவங்கள் அற்ப நுகர்வுத் தத்துவங்களாகத் தூற்றப்பட்டன . பௌத்தம் மொத்தமாக அழிக்கப்பட்டு மக்களின் நினைவிலிருந்தே துடைத் தெறியப்பட்டது.” என்கிறார் தேவ பேரின்பன் . இவர் எழுதியதம்ழர் வளர்த்த தத்துவங்கள்எனும் நூலும்  ,அருணன் எழுதிய  ‘தமிழரின்  தத்துவ மரபுஎன்னும் நூலும் இன்னும் விவரமாய் நம்மோடு பேசும் . ஆர்வமுள்ளோர் தேடிப் படிக்க வேண்டுகிறேன்.
தமிழரின் செழுமையான தத்துவ மரபு பெரிதும் லொகாயாதமே அதாவது பொருள்முதல்வாதமே . பக்தி இலக்கிய காலத்திற்குப் பின் அரசர்கள் ஆதரவுடன் சைவம் , வைணவம் முதலியன திணிக்கப்பட்டன. சமணர்கள் எண்ணாயிரம் பேர் கழுவிலேற்றிக்கொல்லப்பட்டனர் . ஆயினும் சித்தர் மரபும் ,  நாட்டார் வழக்கியலும் இன்னும் தமிழரின் இன்னொரு மரபை சொல்லிக்கொண்டிருக்கிறது . பெருந்தெய்வ வழிபாடு , சிறுதெய்வ வழிபாடு என இரு மரபும் இன்னும் தொடர்கிறது . என்னதான் பெருந்தெய்வ வழிபாட்டில் தமிழன் ஈடுபடினும் நல்லது கெட்டத்தில் குலதெய்வத்துக்கு  படையல் செய்வது நமது  மரபின் இன்னொரு கூறு இன்னும் நீடிப்பதின் சாட்சி ..அரசர்கள் கட்டிய ஆலயங்களை வைத்து மட்டுமே ஒரு நாட்டின்இனத்தின் மரபை முடிவு செய்ய இயலுமா? கிராம தேவதைகளும் நாட்டார் வழக்கும் வேறு வரலாற்றைச் சொல்லுமே!
இப்படி சமயம் மேலொங்கியது. ஆயினும் சுமார் நூறாண்டுக்கு முந்தைய நில ஆவணங்கள் உள்ளிட்டவைகளில் சிவமதம் , விஷ்ணு மதம் என்றே காணப்படும் . இந்து என்ற சொல்லும் கருத்தும் பின்னர் நம்மிடம் வந்து சேர்ந்தவையே !

நன்றி : வண்ணக்கதிர் , தீக்கதிர்   3 மே 2015
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif