ஒரு பக்தனும் ஒரு தொண்டனும்

Posted by அகத்தீ Labels:





ஒரு பக்தனும் ஒரு தொண்டனும்
“அலகு குத்தி
அங்கப் பிரதட்சணம் செய்து
மாலையிட்டு
மண்சோறு தின்னும்
பக்தனையும்..

கொடிதூக்கி
கோஷம் போட்டு
போஸ்டர் ஒட்டி
பொறந்த நாள் கொண்டாடும்
தொண்டனையும்...

. கடைசிவரை அப்படியே
வைத்திருப்பதன் மூலம்
தங்கள் இடங்களைத்
தக்கவைத்துக் கொள்கிறார்கள்
கோயிலில் கடவுளும்
கோட்டையில் தலைவனும்”
- ஆனந்த விகடன் 3-7-2013 சொல் வனம் பகுதியில் பெ.மணிகண்டன் எழுதிய இந்தக் கவிதை பிரசுரமாகி இருந்தது .

இத னைப் படித்த என் மகள் எனக்கு வாசித்துக் காண்பித்து பாராட்டினாள். நானும் சபாஷ் என்றேன். உரையாடல் கவிதையில் சுற்றிச் சுழன்றது.சமூக ரணத்தைப் படம்பிடித்திருப்பதால் கவிதை நெருப்புத் துண்டாய் தெறித்து விழுந் திருக்கிறது. ஆயினும் பக்தனின் அறியாமை யும் தொண்டனின் ஏமாளித்தனமும் ஒரே தன்மையுடையதா? என்ற கேள்வி எங்கள் உரையாடலில் ஓங்கி எழுந்தது.

பக்தனின் அறியாமை அல்லது நம்பிக்கை இரண்டு அடிப்படைக் கூறுகளை உள்ளடக் கியது. முதலாவதாக, பிஞ்சுப் பருவத்தி லேயே பெற்றோராலும் உடன் இருப்போர் களாலும் சமூகத்தாலும் பதியம் போட்டு வளர்க்கப்பட்ட முள்மரம் அது.வளர்ந்த சூழ லும் வாழும் சமூகமும் அதை முற்றச்செய்து கொண்டிருக்கிறது. அடுத்ததாக, வாட்டி வறுக்கும் பிரச்சனைகளிலிருந்து ஒவ்வொருத் தனும் விடுபடவே விரும்புகிறான். குறுக்கு வழி தேடுகிறான்.கடவுள் நம்பிக்கை ஒத் தடம் கொடுக்க ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஒரு தற்காலிக நிவாரணமாகிறது. ஏக்கப் பெரு மூச்சாய் இதயம் இல்லாதவர்களின் இதயமாய் அது செயல்படுகிறது. கவலையை மறக்க போதையில் மூழ்குவோர் சிலர்; கட வுள் மற்றும் சடங்குகளில் மூழ்குவோர் பலர். ஆம், கடவுள் மத நம்பிக்கை அபினாக செயல்படுகிறது. அதே சமயத்தில் தன் முயற்சியை போராட்டத்தைக் கைவிடாத வன் பிரச்சனைகளிலிருந்து மீண்டெழுந்து முன்னேறுகிறான். அப்படியின்றி வெறுமே கண்மூடித்தனமாய் சடங்குகளில் மூழ்கு பவன் புதை சேற்றில் அமிழ்கிறான்.நாத்திகர்கள் அல்லது தமிழக பகுத்தறிவு வாதிகள் தர்க்கபூர்வமாய் கடவுளை மறுக்கின்றனர். மார்க்சியர்கள் அறிவியல்பூர்வமாய் இதனை அணுகுகின்றனர். இருசாரார் எண்ணிக்கையும் குறைவே. ஏதோ ஒரு வகை யில் ஏதோ ஒரு மத நம்பிக்கையின் பிடிமானத் திலேயே பெரும்பாலோர் உள்ளனர்.இது திடீ ரென முளைத்ததல்ல. நாள்பட்ட ரணம். இதன் தன்மையும் சிகிச்சையும் நுட்பமானவை.

தொண்டனின் அரசியல் ஏமாளித்தனம் வேறுவகையானது. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என பன்னெடுங்காலம் பயணப்பட் டது மனித சமூகம். மறுபுறம் அதற்கு எதிரான கலக முயற்சிகளும் தொடர்ந்தன. மன்னன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பதை ஒருகட்டத்தில் மறுதலித்து சிரமறுக்கும் வேந்தனை எதிர்த்து ஜனநாயகம் கண்டது சாதாரணச்செய்தியா? வியர்வையும் குருதியும் கொட்டியன்றோ ஜன நாயகப் பாதை அமைக்கப்பட்டது. அன்றைய மன்னராட்சியின் மிச்சசொச்ச நிலப்பிரபுத்துவ சிந்தனையும் பழக்கவழக்கங்களும் இன்னும் தொடரவே செய்கிறது. தனிநபர் துதி என்கிற கொடிய தொற்றுநோய் இன்னும் நம்மைப் பீடித் துள்ளது. தத்துவத்தின் இடத்தில் தனிப்பட்ட தலைவரை நிறுத்துவதும் - கொள்கையின் இடத்தில் வெற்று கோஷங்களை நிறுத்துவதும். நோய்க்குறியாகும். ஆனால் அரசியலை சமூக பொருளாதார பண்பாட்டு அறிவியலாய் புரிந்து கொள்ளாமல் தனிநபர் கவர்ச்சியில் மயங்கி நிற்பதும் தனிநபர் துதியில் தன்னை இழப்பதும் இதன் தன்மைகள்.இந்த அரசியல் ஏமாளித் தனத்தினையும் பக்தனின் அறியாமையும் ஒரே நேர்கோட்டில் வைக்க இயலாது. வைக்கக் கூடாது.அரசியல் ஏமாளித்தனம் என்பதின் உண்மைச் சாரம் எதில் அடங்கி இருக்கிறது என்றால் ஒவ்வொரு ஆரவாரமான சொற்றொடருக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலம் ஒளிந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமலிருப்பதில் அடங்கியிருக்கிறது. இந்த வர்க்க ஞானம் வந்தால் விடுதலை பெறமுடியும்.வாழ்கைப் போராட்டமும் வர்க்கப்போராட்டமும் அதனை நமக்கு கற்றுக்கொடுத்துவிடும்.

ஆக,தொண்டனின் ஏமாளித்தனம் நீடிக்க இயலாது. சுற்றுச்சூழல் அவனை விழிப்புணர்வின் பக்கம் தள்ளிவிடும்.ஆனால் பக்தனை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல.கடவுளை நம்புகிறவன் முட்டாள் என முத்திரை குத்துவதும் அரசியல் சாக்கடை என அசிங்கப்படுத்து வதும் வெளிப்பார்வைக்குத் தீவிரமாகத் தோன் றும், ஆனால் இரண்டும் சுரண்டும் வர்க்க திற்கே இறுதியில் சேவகம் செய்யும்.குடும்பம் நடத்தவும் அரசியல் நடத்தவும் அறிவியல் தேவை எனச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கூறியது இங்கே மெய்யாகிறது. கவிஞன் உணர்ச்சி வசப்பட்டால் கவிதை கிடைக்கும். ஆயின் சமூகம் சிந்திக்க மறந்து உணர்ச்சி வசப்பட்டால் பேராபத்து ஏற்படும். சிந்திக்க கற்றுக்கொடு! போராட கற்றுக்கொடு எல்லாவற்றையும் மாற்றிவிட இயலும். மாறாதது ஏது மில்லை.. கவிதையும்தான்.
   

வாழ்க்கைக்கு கனல் மூட்டியவன்

Posted by அகத்தீ Labels:




வாசகர்கள் கருத்துக்கள்

உங்கள் கருத்துகளை பதிவு செய்ய

பெயர்
மின் அஞ்சல்
கைப்பேசி எண்
உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யவும்

 
 

நவ கடோபநிஷத்

Posted by அகத்தீ Labels:

 
 
 
நவ கடோபநிஷத்


ருத்தலும் வாழ்தலும்
ஒன்றென ஆகா!
நான் , நீ , நாம் - இங்கு
இருந்தென்ன சாதித்தோம் ?

உண்டலும் உடுத்தலும்
உறைதலும் மகிழ்தலும்
கண்டலும் கற்றலும்
இச்சையும் வித்தையும்
பெற்றலும் வளர்தலும்
பாசமும் பகைத்தலும்
இருத்தலின் நிமித்தம்
இயல்பாய் நிகழ்வன.

வாழ்தலின் நோக்கம்
இசைபட வாழ்தலும்
புகழோடு தோன்றலுமே
பிறப்பின் பொருளாமோ!
இமைக் கதவை திறப்பீர
ஊரோடு ஒத்து வாய்மூடி நின்று
சீறுவது சீறாமல்
கொடுமைக்கு இணங்கலோ!

ஊரே எதிர்ப்பினும்
உறவே பகைக்கினும்
அநீதியை எதிர்ப்பதில்
அங்குலம் பிசகாமல்
குன்றென இருத்தலே
வசை மிகினும்
இகழ்ந்தொதுக்கினும்
வாழ்வின் பொருளாகும்.

நொடியில் நிகழும் மரணம் -பிறர்க்கு
சுமையற்ற மரணம் நிகழின் நன்றே!
பிறப்பும் இறப்பும் உன் வசமோ
எந்த நொடியும் வருமே மரணம்!
வாழும் ஒவ்வொரு கணமும்
மனதும் அறிவும் போற்ற மானுடம் வாழ
ஆற்றுவீர் வசைதாங்கிப் பொதுப்பணி!!!
 
 
காலம் தோறும் வெல்வாய்!

விதையில் பிறப்பெடுத்து - என்றும்
காலத்தை வென்றெடுத்து
கண்ணீரில் மிதக்கவிட்டு -இன்று
காவியமானவரே வாலி!

துட்டுக்கு மெட்டுக்கு கைதட்டுக்கு
பாட்டென்று சொன்னாய் ! - ஆனாலும்
சாகாத பாடல்களில் - என்றும்
சாகாத புகழ்கொண்டாய்!

மதம் உனக்கு பிடிக்கும் - ஆயின்
மதம்பிடித்து அலைந்ததில்லை..
மனிதத்தை மறந்ததில்லை - அதனால்
மக்கள் நெஞ்சத்தில் நிலைத்துவிட்டாய்!

பிறரை மதிக்கத் தெரிந்தவன் மனிதன்
உயிராய் நேசிக்கத் தெரிந்தவன் கவிஞன்
நாட்டை வழிநடத்தத் தெரிந்தவன் தலைவன்
நாட்டை பாட்டில் படம்பிடித்தவன் கவிஞன்

வாலி! நீ மனிதன் ! நீ கவிஞன்!- நீ
வாழ்ந்த போதும் மறைந்த பின்னும்
நீ வடித்த கவிதை மின்னும் - அது
காலம் தோறும் வெல்லும்!
 
காலம் சொன்னவை..

ழையும் வெயிலும் ஒருசேர
மனதில் இன்பம் அலைமோத
தேநீர் கோப்பையில் சுகம்கண்டு
கவிதைக் கனவில் எனைமறந்து
கண்ணை விழித்தபடி தூங்குகிறேன்
காலம் சொன்னவை ஏராளம்.

ஊரைப் பெயரை மறைத்தாலும்
உருவை மறைக்க இயலாதே!
தாய்ப்பாலோடு உண்ட மொழி
சாகும் வரை தலைகாட்டும்
பண்ணிப் பண்ணிப் பேசிடினும்
நம்மின் அடையாளம் அதுவேதான்.

மேல்நிலையாக்க மோகத்தில்
தன்னிலை மறைத்து அலைவானேன்?
நாமாயிருப்பதே நம்பலம் என்பதை
நாளும் உணர்த்துமே வரலாறு - அந்த
நாமென்பது சாதிமதத்தில் சங்கமமில்லை
வியர்வைக்கு இல்லை வேறுபாடு...

-சு.பொ.அகத்தியலிங்கம்
 
 
 
 
 

யோகா செய்தால் பசி எடுக்காதா ?

Posted by அகத்தீ Labels:




யோகா செய்தால் பசி எடுக்காதா ?

சு.பொ.அகத்தியலிங்கம்
 
யோ கா , பிராணாயாமம், தியானம் இவை சர்வ ரோக நிவாரணியாக தற்போது விற்கப் படுகிறது . பரபரப் பும் பதற்றமும் மிகுந்த இன்றையச் சூழலில் இவற்றின் அவசியத்தை யாரும் குறைத்து மதிப்பிட இயலாது; ஆனால் இவை குறித்த பார்வை மிகவும் பழுதுபட்டதாக உள்ளது. ஆன்மிக மத மயக்கம் தருவதாக வும் ஃபேக் சயின்ஸ் என ஆங்கிலத் தில் அழைக்கப்படும் போலி அறி வியல் சாரத்தோடும் சந்தைப்படுத் தப்படுகிறது. யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை என்கிற இந்த நூல் அதற்கு மிகச் சிறந்த உதாரண மாக உள்ளது.

யோகா என்பது உடற்பயிற்சி போன்றதே, ஆனால் இது உள் ளுறுப்புகளுக்கான பயிற்சி. இது பிராணாயாமம் எனப்படும் மூச் சுப்பயிற்சியோடு இணந்தது. தியானம் எனப்படுவது உள்ளத்தை அதாவது சிந்தனையை ஒருமுகப் படுத்தும் பயிற்சியாகும். இவை அனைத்தும் உடல் நலனுக்கு அவ சியமானது.

இதில் யாருக்கும் ஐய மில்லை . இது அனைத்து பிரிவு மக்களுக்கும் உரியதாகும். ஆனால் இதனை மதத்தோடு சேர்த்து பிசை வது தேவையற்றது. பொருளற்றது.இந்நூலில் முன்னுரை தொடங்கி முதல் எட்டு அத்தியாயம் முடிய 47 பக்கங்கள் பார்வைக்கோளாறு மிகுந்தவை யாகவே உள்ளன.

யோகா கடவுள் நம்பிக்கையற்றவர் களுக்கு கடவுள் நம்பிக்கையளிப்ப தாகக் கூறுவதும்; இந்து தர்ம நெறி களைக் கொண்டு அமையப் பெற்ற தாகக் கூறுவதும்; ஆத்ம தரிசனம், ஆன்மிகத் தேடல் என்றெல்லம் ஜோடனை செய்வதும் அனைத் துப் பகுதி மக்களும் இதனை பயில மனத் தடைகளை உருவாக்கி விடும்.


பசிக்கும் பொழுது உணவு கிடைக்காமல் போனால் தொண்டை குழியில் சம்யமம் செய்தால் பசிதாகம் அற்றுப் போய் விடுகிறது (பக்கம் 27 ) தாரணை, தியானம் , சமாதி மூன்றும் சேர்ந்தால் சம்யமம் என்கிறார் நூலாசிரியர். இந்த வாதம் பகுத்தறிவுக்கு உகந்ததா? பசிப்பிணிக்கு இது தீர்வாகுமா?

அதுபோல், இறையரு ளையும், உலகில் பொருளையும் ஒருங்கே பெற யோகாசனக் கலை மிகவும் உதவும் ( பக்கம் 11) என்கிறார். யோகா உடல் நலம் சார்ந்தது . அதற் கும் மேல் பொருளீட்ட உதவும் என்பது எப்படி சரியாகும் ? நூலாசிரியர் யோகா பயிற்சியளிப்பதன் மூலம் பொருளீட்டலாம் ; ஆனால் அது பொது நியதியாக முடியாது . மனம் புருஷனில் அடங்காத பூவை பெண் போல என்றும் , பரமார்த்திக வாழ்வு எனப்படும் பகுத்தறிவுக்கு அப்பாற் பட்ட வாழ்வு இருப்பதாகவும் , ஸ்தூல சரீரம் , சூக்ஷ்ம சரீரம் , காரண சரீரம், மகாகாரண சரிரம் என்றெல்லாம் அறிவியல் பூர்வமாக நிருபிக்க முடி யாத விவகாரங்களைக் கூறுவதும், நூலாசிரியரின் அறிவியல் பார்வைக் குறைவையும் சமூக சிந்தனையின்மை யையும் சுட்டுகிறது.

உடற்பயிற்சியும் யோகாசனமும் எதிர் எதிரானது அல்ல ; மாறாக ஒன் றோடொன்று நெருக்கமானது. பின்னிப் பிணைந்தது. ஆனால் நூலா சிரியர் இவற்றை எதிர் எதிராக நிறுத் துவது ஆபத்தான பார்வையாகும். மேலும் உடற்பயிற்சியால் அவசர புத்தியும் குறுக்குப் புத்தியும் ஒழுக்கக் கேடும் ஏற்படும் என்பதும், பிற்போக்கு சிந்தனைகளும் சுயநல எண்ணங் களும் பேராசைகளும் பெருகும் என்பதும் அடிப்படை ஆதாரமற்ற தாகும். அது போல் யோகாசனத்தால் முற்போக்கு சிந்தனைகளும் பொது நல எண்ணங்களும் ஒழுக்கமான வாழ்க்கையும் பெருகும் என்பதும் அதீத கற்பனையே ! வெறும் விளம் பரச் சொல்லாடலே.

சுரப்பிகள் குறித்தும் உளவியல் குறித்தும் சில அறிவியல் தகவல்கள் இந்நூலில் விரவப்பட்டிருந்தாலும் பொதுவில் ஃபேக்சயின்ஸாகவே இந்நூல் அமைந்துள்ளது.உப்பு, சர்க் கரை , முட்டை , அரிசி , பால் என ஐந் தையும் தவிர்க்கச் சொல்வது மருத்துவ அறிவியலுக்கு புறம்பானது. யாருக்கு எது தேவை எது தேவை இல்லை என் பதை அவரவர் உடல் நலன் சார்ந்து மருத்துவர் தாம் முடிவு செய்யவேண் டும் . பொதுவாகக் கூறுவது பிழையா கும் . மேலும் ஊட்டச்சத்து குறைவாக உள்ளோர் அதிகம் வாழும் நாட்டில் பாலையும், முட்டையையும் தவிர்க்கச் சொல்வது சமூக விரோதப் பார்வை யாகும்.

இப்படி பழுதான பார்வையைப் பேசும் முதல் 47 பக்கங்களைத் தொடர்ந்து யோகா செயல் விளக்கம் உள்ளது. அது குறித்து அத்துறை விற் பன்னர்கள் மட்டுமே கருத்துக் கூற இயலும். பாமரப்பார்வையில் பய னுள்ளதாகவே படுகிறது . ஆயினும் எல்லா யோகாசனத்தையும் எல்லோ ரும் செய்யக்கூடாது என்பதை வல்லு னர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இதய நோய் உள்ளவர்கள் செய்யக்கூடா தவை, கர்ப்பிணிப்பெண்கள் செய்யக் கூடாதவை என விதிவிலக்குகள் உண்டு. ஆனால் இந்நூலில் அந்தத் தெளிவு இல்லை.

யோகாசனக் கலை என்கிற பெய ரில் திசை திருப்பும் இந்துத்துவ முயற் சிகளுக்கு இந்நூல் துணை போகிறதோ என்கிற ஐயம் இந்நூலை வாசிக்கும் போது ஏற்படுகிறது . இது போல் யோகா குறித்து வெளிவந்துள்ள எண்ணற்ற நூல்களையும் அறிவியல் கண்கொண்டு பார்க்கத் தவறினால் நம்மையறியா மலேயே நாம் இந்துத் துவ மாயையில் வீழ்ந்து விட நேரிடலாம்.


யோகாசனக் கலை : ஒரு வாழ்க்கைத் துணை,

ஆசிரியர்கள் : கே . எஸ் . அழகிரி , திருமதி சிவகாமி,
வெளியீடு : நர்மதா பதிப்பகம்,

10, நானா தெரு , பாண்டி பஜார்,

தி.நகர் , சென்னை 600 017.

பக் : 164 , விலை : ரூ. 120.

   
   
    

பழக்கம் -வழக்கம்-ஒழுக்கம் : தேவை புதிய பார்வை

Posted by அகத்தீ Labels:

 
 
பழக்கம் - வழக்கம் - ஒழுக்கம்
தேவை புதிய பார்வை
 

சு.பொ.அகத்தியலிங்கம்

 

 

 
பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இந்த வார்த்தைகள்  நம் வாழ்க்கை நெடுக தினசரி ஏதோ ஒரு வகையில் நம்மை ஆட்சி செலுத்துகிறது. இவை குறித்து கேள்விகேட்பவரை சமூகம் எதிர்மறையாகவே பார்க்கிறது. அதே நேரம் இவை காலந்தோறும் மாறிக்கொண்டே வந்திருக்கிறது என்ற உண்மையை சமூக பொதுபுத்தி வசதியாக மறந்துவிடுகிறது. இவற்றில் எது சரி, எது தேவை, எது சுமை, எது முன்னேற்றத்திற்கு தடை என்றெல்லாம் பகுத்துப் பார்க்க நாம் முனைவதில்லை. அப்படி முயற்சி செய்வது தப்பு என்று கூட நம்மில் பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். எனினும் இவைகளை கேள்விக்குள்ளாக்கி  எதிர்த்துத்தான் சமூக சீர்திருத்த இயக்கம் செயல்பட்டுள்ளது. இந்த சமூகத்தை மாற்ற விளைகிறயாரும் இவை குறித்து அறிவியல் பூர்வமாக ஆய்வுக்குள்ளாக்குவது தவிர்க்க முடியாதது, தவிர்க்கக் கூடாது.
 
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது பழைய ஏற்பாடு; ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்பது புதிய ஏற்பாடு. விசுவாசிக்கிறவன் சொர்க்கத்திற்கு செல்வான் என்கிறது பைபிள். சந்தேகிக்கிறவன் அழிவான் என்கிறது இந்து சாத்திரங்கள். ஆனால் எல்லாவற்றையும் சந்தேகிக்கச் சொன்னார் மார்க்ஸ். எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்கிறது  நவீன அறிவியல். கேள்வி கேட்பவன் அந்த நிமிடம் மட்டுமே முட்டாளாக இருக்கிறான். ஆனால் கேள்விகேட்காதவன் வாழநாள் முழுவதும் முட்டாளாக இருக்கிறான் என்பது சீனப்பழமொழி.
 
துஷ்டனைக் கண்டால் தூரவிலகிப்போ என்பது பழமொழி. பாதகம் செய்வாரைக் கண்டால் மோதி மிதி என்பது பாரதி மொழி. ஙப்போல் வளை என்பது ஔவையாரின் ஆத்திச்சூடி. குன்றென நிமிர்ந்து நில் என்பது பாரதியின் ஆத்திச்சூடி. 
 
தையல் சொல் கேளேல் என்றார் ஔவை. ஆனால் பெண் சமத்துவத்திற்கு எதிரான இச்சொல்லை இன்று ஏற்க முடியுமா? முறுக்கி வளர்க்காத மீசையும் முறித்து வளர்க்காத முருங்கையும் அடித்து வளர்க்காத பிள்ளையும் உருப்பட மாட்டா என்பது சொலவடை. ஆனால் பிள்ளைகளை அடித்து இம்சை செய்வதை நவீன சிந்தனை ஏற்குமா? ஆக, நம் சிந்தனையில் செயலில் வாழ்க்கையில் பல மாறுதல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து மாறும். ஆயினும் பழக்கம், வழக்கம், ஒழுக்கம் என பொத்தாம் பொதுவாக பேசுவதும் தவறான கருத்தோட்டங்களை நியாப்படுத்துவதும் தொடரத்தான் செய்கிறது. 
 
முதலில் பழக்கம் என்பதை எடுத்து கொள்வோம். எங்கள் ஊர்பழக்கம், அல்லது எங்கள் சாதிப்பழக்கம் என்கிற பெயரால்  பிறப்பின் போதும் அல்லது   மரணத்தின் போதும் வாழ்க்கை நெடுக்கிலும் பல சடங்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. அவை அறிவியல் பூர்வமாக இன்றைக்கு பொருந்துமா என்று நாம் யோசித்து பார்ப்பதில்லை. உதாரணமாக பெண் பூப்படைவதை ஒட்டி செய்யப்படுகிற சடங்குகளும் அதைத் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு சொல்லப்படுகிற அறிவுரைகளும் பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடுகளாகவே  உள்ளன. ஆனாலும் அதை எந்த கேள்வியும் கேட்காமல்  கடன் வாங்கியாவது செய்கிற பழக்கம் தொடரத்தான் செய்கிறது. 
 
பழக்கம், வழக்கம் இந்த இரண்டு சொல்லிற்கும் தெளிவான வரையறை செய்வது இயலாத காரியம். நடைமுறையில் இரண்டும் குழம்பியே இருக்கிறது. அக்கா மகளை திருமணம் செய்து கொள்வது எங்கள் குலவழக்கம்தான் என்று பல இடங்களில் நியாயப்படுத்தப்படுகிறது.  மிக நெருங்கிய இரத்த உறவுக்குள் திருமணம் செய்து கொள்வது பல உடல் சிக்கல்களை உருவாக்கும். பிறக்கிற குழந்தை ஊனமுற்றவர்களாக பிறக்க வாய்ப்பு அதிகம் என்கிறது மருத்துவ அறிவியல். ஆனால் அத்தை மகள், அக்காள் மகள் இவர்களை திருமணம் செய்வது இன்னும் தொடரத்தான் செய்கிறது. 
 
அதே சமயம் சில பிரிவினரிடையே சகோதர உறவில் திருமணம் செய்கிற பழக்கமும் உண்டு. இதில் எது சரி, எது தப்பு என்று மிகப் பெரிய விவாதம் சமூகத்தில் நடைபெறுகிறது. சகோதர முறையில் திருமணம் செய்வதை மிகவும் ஒழுக்ககேடாக கருதுகிற விமர்சிக்கிற ஒரு கூட்டம் இருக்கிறது.  உண்மையில் அத்தை மகள் அல்லது சித்தி மகள் என்பதில் மிகப்பெரிய வேறுபாடு எல்லாம் அறிவியல் ரீதியாக இல்லை. இரண்டும்  குடும்ப மரத்தின் இருவேறு கிளைகளே. இரண்டு வழி திருமணங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்கத்தக்கது அல்ல. 
 
ஆக பழக்கம், வழக்கம் என்ற பெயரால் உறவுமுறைக்குள் கெட்டியாக நின்று கொண்டு இப்படி திருமணம் செய்து கொள்வது  மிகப் பெரிய சமூக சவாலாக வருங்காலத்தில் உருவெடுக்கும்.குறிப்பாக அகமண உறவுமுறை இந்திய சமூகத்தில் வலுவாக இன்னும் நீடிப்பதும்; அதிலும் நெருங்கிய உறவுமுறைக்குள் திருமணங்கள் நடைபெறுவதும் வருங்காலத்தில் உடல்ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் எண்ணிக்கையை மிகப்பெரிய அளவில் அதிகரித்து விடும் என மரபியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். ஆயினும் பழக்கம், வழக்கம், சம்பிரதாயம், சாஸ்திரம், சாதிப்பெருமை, மத பெருமை என்கிற பெயரால் இந்த தவறான பழக்க வழக்கம் இன்னும் நியாயப்படுத்தப்படுகிறது.
 
 காதல் நம் பண்பாட்டின் கூறு என்று பெருமை பேசிக் கொண்டே காதலர்களுக்கு கொள்ளிவைப்பது ஏன்? சாதி, மத, வெறியன்றி வேறு என்ன? காதல் திருமணம் என்பது ஒழுக்ககேடு அல்ல. உயரிய பண்பாடு என்று உரக்கச் சொல்ல வேண்டாமா? 
 
இதுபோல் நாம் வாழ்க்கை நெடுக கருவறை தொடங்கி கல்லறை வரை எண்ணற்ற  சடங்குகளும் பழக்கங்களும், வழக்கங்களும் நம்கை பீடித்துள்ளன. அவை குறித்து ஓர் அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு நம் சமூகம் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 
 
புலால் மறுப்பு என திருக்குறளில் ஒரு அத்தியாயமே உண்டு.  புலால் பழக்கம் நல்லதா கெட்டதா? இது மதம் சார்ந்தும் சாதி சார்ந்தும் ஒரு விதமான கெட்டித்தட்டிப்போன கருத்தோட்டமாக உள்ளது. சைவம், அசைவம் என உணவு பழக்கத்தை சமயம் சார்ந்து இருகூறாக வைத்துள்ளனர். அது எப்படி சரியாக இருக்க முடியும். ஆதி மனிதன் பச்சைக் கறியைத்தான் சாப்பிட்டான். நெருப்பில் சுட்டுச்சாப்பிடுவதற்கு பல ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான். பச்சைக்காய்கறிகளைத் தான் சாப்பிட்டான். வேக வைத்து சாப்பிட அறிந்ததே வெகுகாலத்திற்கு பின்னர் தான். மசாலாவின் சுவையை அறிந்தது சில ஆயிரம் ஆண்டுகள் முன் தான். புலால் சாப்பிடுவது அதாவது மாமிசம் சாப்பிடுவது மனிதனின் இயல்பு.  புலால் மறுப்பு தான் அதற்கு மாறானது. சைவம் அசைவம் என்ற சொல்லாடலே தவறு. புலால் உண்போர் புலால் மறுப்போர் என்றோ - புலால் பழக்கம் மரக்கறி உணவு பழக்கம் என்றோ தான் சொல்ல வேண்டும்.  புலால் வேண்டுமா வேண்டாமா என்பதை சமயமோ சாதியோ முடிவு செய்யக்கூடாது அவரவர் சுயவிருப்பமும் உடல் நலனும் சார்ந்து அவரவருக்கு எது தேவை என்பதை முடிவு செய்வது தான் அறிவியல் பூர்வமான பழக்கமாகும். இதற்கு மாறான எல்லாம் சமூக அராஜகமே. 
 
ஒருவர் இறந்து போனால் அவரை எரிப்பதற்கு எடுத்துச் செல்லும் போது கொள்ளிச்சட்டி ஏந்தி போவதும்; மேளதாளம் கொட்டிச் செல்வதும் நடக்கிறது. ஆதிகாலத்தில் நெருப்பு என்பது அபூர்வ பொருளாக இருந்தது. தீப்பெட்டி கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே தீயை சுமந்து செல்லவேண்டியது தேவையாக இருந்தது. ஆகவே அந்த காலக்கட்டத்தில் கொள்ளிச்சட்டி ஏந்தினர். ஆனால் இன்றைக்கு மின்சார சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்துச் செல்வோரும் கொள்ளச்சட்டி ஏந்துவது எந்த வகையில் அறிவுபூர்வமானது. அதுபோல் ஆதி காலத்தில் பிணத்தை எரிக்க செல்லும்மிடம்  ஒதுக்கு புறமாகவும், புதர்காடாகவும் இருப்பது தவிர்க்க இயலாது. அங்கே நரி போன்ற விலங்குகள் தொல்லைத் தரக்கூடும். ஆகவே விலங்குகளை விரட்ட மேளதாளம் கொட்டிச் செல்வது தேவையாக இருந்தது. இன்றைக்கு அது தேவையா?
 
 
ஒழுக்கம் குறித்து பேசாத மதங்களோ, நீதிநெறி இலக்கியங்களோ, சமூக சிந்தனையாளர்களோ இருக்கவே முடியாது. அதே சமயம் எது ஒழுக்கம் , எது ஒழுக்கமின்மை என்பது குறித்த பார்வையில் சமூகத்தில் குழப்பமும், பிற்போக்குதனமும், ஆதிக்க வெறியும், சாதியும், பெண்ணடிமைத்தனமும் கோலோச்சவே செய்கின்றன. பொய்சொல்லக்கூடாது, திருடக்கூடாது, குடிக்கக்கூடாது, கொலைசெய்யக்கூடாது, ஏமாற்றக்கூடாது, வஞ்சகம் செய்யக்கூடாது, புறம்பேசக்கூடாது இது போன்ற பொதுவான கட்டளைகளை காலம் காலமாக கேட்டு வருகிறோம். இனியும் அவை தொடரும். இவற்றை பொதுவாக சொல்லுகிற போது நியாயமாக தோன்றுகிறது. ஆனால் கொஞ்சம் அலசத்துவங்கினால் அது பெரும் விவாதப்பொருளாகிவிடுகிறது. 
 
பொய்சொல்லக்கூடாது என்பது சரியே. ஆனால் மத நூல்கள் சொல்வது எல்லாம் பொய்தானே. சொர்க்கம், நரகம் என்பது பொய்தானே. கடவுள் என்பது பொய்தானே. பாவம் புண்ணியம் என்பது வெறும் கற்பிதம் தானே. பொய் சொல்லக்கூடாது என்று சொல்லி விட்டு மதநம்பிக்கையை கைவிடக்கூடாது என்று சொல்வது முரண்பாடானது அல்லவா? 
 
திருடக்கூடாது மிகச்சரி. நாகரிக சமூகத்தில் திருட்டு என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல. ஆனால் சொத்துடமையின் வேர்எங்கே என்று அலசினால் அது  பிறர்சொத்தை - பிறர்உழைப்பை - பிறர்சேமிப்பை திருடியது என்கிற பேருண்மை பளிச்சிடும். இது சுரண்டலின் கூறாக உள்ளது. அப்படியானால் இந்த திருட்டை எதிர்ப்பது தேவையா இல்லையா? பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே என இழப்பதற்கு எதுவும் இல்லாத உழைப்பாளியைப் பார்த்து ஒழுக்க உபதேசம் செய்பவர்கள்; சுரண்டலின் அடிப்படையே அடுத்தவருக்கு உரியதை அபகரிப்பது என்பதை உணர்வார்களா? அப்படியானால் இந்த சுரண்டலை எதிர்க்க வேண்டாமா? 
 
கணவனுக்கு அடங்கியவளாகவே மனைவி இருக்க வேண்டும் அதுவே பெண்ணுக்குரிய ஒழுக்கம் என்று இன்றும் நடைமுறையில் சமூக பொது புத்தியில் வலுவான கருத்து உள்ளது. ஆனால் இது பெண்ணடிமைத்தனத்தின் குரல் அல்லவா? ஒழுக்கம் என்பது மனைவிக்கு கணவன் அடங்குவதோ அல்லது கணவனுக்கு மனைவி அடங்குவதோ அல்ல இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு; குறை நிறைகளை அங்கீகரித்து - விட்டுக் கொடுத்து வாழ்வதே ஆகும். ஆனால் எந்த ஒழுக்க உபதேசிகளும் இதனை வலியுறுத்துவதில்லையே ஏன்? 
 
தீண்டாமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லையே ஆனால் இந்தியாவில் மட்டும் இந்த பழக்கம் ஏன்? அது மட்டுமல்ல சாதிய ரீதியாக ஒழுக்கக் கோட்பாடுகள் திணிக்கப்படுவது ஏன். உதாரணமாக பிராமணர்கள் பூணுல் அணிகிறார்கள். அவர்கள் இருபிறப்பாளர்கள் என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது.  ஆனால் பிராமணப் பெண்கள் ஏன் பூணுல் அணிவதில்லை? மற்ற சாதிகளுக்கு பூணுல் அணியும் உரிமை ஏன் இல்லை? திருமணத்தின் போது மணமகனுக்கு பூணுல் அணிவித்து திருமணம் செய்யப்படுகிறது. இதன் பொருள் என்ன? சூத்திரர்களுக்கு திருமணம் செய்ய மநு உரிமை வழங்கவில்லை எனவே பூணுல் அணிவித்து அந்த கொஞ்ச நேரம் மட்டும் அவனை பிராமணன் ஆக்கி திருமணம் செய்வதும் முடிந்ததும் பழையபடி சூத்திரனாக்குவதும் தொடர்கிறது. ஆனால் கேள்வி எழுப்பாமலே இந்தப் பழக்க வழக்கத்திற்கு பணிந்து போகிறார்கள். ஆனால் இதை மீறி  பதிவுத் திருமணமோ, சுயமரியாதை திருமணமோ செய்பவரை ஒழுக்கம் குறைந்தவராகவோ அல்லது வித்தியாசமான பிறவியாகவோ பார்க்கிற போக்கே சமூகத்தில் இன்னும் தொடர்கிறது. இந்த மநுவின் ஒழுக்க நீதிகள் தொடரலாமா? 
 
பொதுவாக பழக்க வழக்கம் என்பது பண்பாட்டின் ஒரு கூறாகவும்; ஒழுக்கம் என்பது பண்பாட்டின் கருத்து நீரோட்டமாகவும் கருதப்படுகிறது. ஆனால் அந்த சமூகம் அடிமை சமூகமாக இருக்கிற போது அடிமை எஜமானன் என்கிற சமூக பிரிவினையை நியாயப்படுத்தவே பழக்கம், வழக்கம், ஒழுக்கம் அனைத்தும் பின்னப்பட்டன. அந்த சமூகம் நிலப்பிரபுத்துவ சமூகமாக மாறியபோது அதற்கொப்ப நிலப்பிரபு, பண்னையடிமை என்கிற சுரண்டலை நியாயப்படுத்த இவை வலுப்படுத்தப்பட்டன. மற்ற நாடுகளில் நிலப்பிரபுத்துவ சிந்தனை உற்பத்தி கருவி சார்ந்து உருவானது - செயல்பட்டது. ஆனால் இந்தியாவில் அது சாதி என்கிற கொடூரமான பிரிவினையாய் சமூகத்தை மேல்கிழாய் - படிநிலையாய் குதறிப்போட்டு விட்டது. அது இன்னும் தொடர்கிறது.  முதலாளித்துவ சமூகம் பிற நாடுகளில் பழக்கம், வழக்கம்,  ஒழுக்கம் இவற்றில் காலத்திற்கு ஒப்ப பல மாறுதல்களை கொண்டு வந்தது. ஆனால் இந்திய சமூகத்தில் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத் தோடு கைகுலுக்கிக் கொண்டு பழைய ஏற்பாடுகளை கெட்டியாக தொடர்கிறது. ஆகவே இந்திய சமூகத்தில் - தமிழ்ச்சமூகத்தில் நாம் இன்று பின்பற்றுகிற - உபதேசம் செய்கிற  பழக்கம், வழக்கம், ஒழுக்கம்  பெரும்பாலும் நிலப்பிரபுத்துவ காலக்கட்டத்தைச் சார்ந்தவையே. அவை சாதியத்தை தூக்கிப்பிடிப்பவையே. நீதிநூல்கள் ஒழுக்க உபதேசங்கள் இவை அனைத்தும் இந்த அடித்தளத்தில் இயங்குபவையே. எனவே கண்மூடித்தனமாக  இவற்றை பின்பற்றுவது ஆபத்தானது. 
 
இதன் பொருள் பொய்சொல் என்பது அல்ல. திருடு என்பது அல்ல. பிறன்மனை திருடு என்பது அல்ல. மாறாக சமத்துவம், சகோதரத்துவம், தோழமை மிகுந்த; ஜனநாயகம் சார்ந்த புதிய பார்வை தேவை என்பது தான். எந்த ஒரு பழக்கம், வழக்கம், ஒழுக்கம் ஆனாலும் அது சாதிய ஆதிக்கத்தை எதிர்க்கிறதா அல்லது மறைமுகமாகவோ, நேரடியாகவோ கெட்டிப்படுத்துகிறதா? என்ற அளவுகோலால் மதிப்பீடு செய்ய வேண்டும். அதேபோல பெண் சமத்துவத்திற்கு உகந்ததா எதிரானதா என்கிற தராசில் எடைபோட வேண்டும். சாதி ஆதிக்கத்தை உடைக்க - பெண் அடிமைத்தனத்தை நொறுக்க  நம்மிடம் உள்ள பல பழக்க வழக்கங்களை ஒழுக்க நியதிகளை தலைகிழாக  மாற்றியாக வேண்டும். இதை செய்கிற போது உன்னை கலகக்காரன் அடங்காதவன் வில்லங்கமான பேர்வழி என சனாதன பேர்வழிகள் வசைமாரி பொழியலாம்.  அதனை ஏற்றுக் கொண்டு தான் இந்த சமூகத்தை மாற்ற முடியும்.
 
 
 “அடி! உடை! நிர்மானி” என்றார் மார்க்சிம் கார்க்கி. தமிழகத்தில் திராவிட இயக்கம் வைதீக கோட்டையை அடித்து உடைக்க சம்மட்டி தூக்கியது. ஆனால் நிர்மானிக்க வேண்டிய சமூகம் குறித்து தெளிவும் தொலைநோக்கும் இல்லாததால் அவர்களின் போராட்டம் விரும்பிய திசைவழி  தொடரவில்லை. அதனால் தான் பண்பாட்டில்  விபரிதங்கள் ஏற்பட்டுவிட்டதாக தற்போது கலைஞர் கருணாநிதி ஒரு திருமண விழாவில் கவலைப்பட்டார். கவலை நியாயமானது. ஆனால்  அதன் காரணத்தை அவர் அலசமாட்டார். திராவிட இயக்கம்  இனி அதை செய்யாது. பொது உடமை இயக்கம் தான் இதற்கான சமூக கருத்துப்போராட்டத்தை சரியான திசை வழியில் முன்னெடுத்து செல்ல வேண்டும். அதுவும் இன்றைய ஊடகங்கள் பரபரப்புக்காகவும் விற்பனைக்காகவும் பழையவற்றிற்கு தங்க முலாம் பூசி சந்தைப்படுத்துகிறது. இந்த ஊடக வியாபாரிகளால் பண்பாட்டுத் தளத்தில்  ஏற்பட்டுள்ள மிக்பெரிய  தாக்கங்களை எதிர்கொள்ள இடது சாரி ஊடகங்கள் ஊக்கமுடன் செயல்பட வேண்டிய காலம் இது. சமூக நீதி - சமூக மாற்றம் இவற்றை மையஇழையாக கொண்டு  புதிய ஒழுக்க நெறிகளை சமூகத்திற்கு வழங்கவும்; சமத்துவம், ஜனநாயகம் இவற்றின் மேல்வலுவாக கட்டப்படுகிற கோட்டையாக புதிய பழக்க, வழக்க பண்பாட்டத் தடத்தை கட்டியமைக்கவும் இடது சாரி ஊடகங்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம் இது. தீக்கதிர் பொன்விழா ஆண்டில் இப்பணியில் நாம் எவ்வளவு தூரம் செய்துள்ளோம் என்பதையும் எவ்வளவு செய்யத் தவறியுள்ளோம் என்பதையும் காய்தல் உவத்தல் இன்றி அலசி அறிய வேண்டும். அதை ஆதாரமாக கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளில் புதிய தடத்தில் முன்னிலும் வலுவாய் முன்னிலும் உறுதியாய், முன்னிலும் தெளிவாய், முன்னிலும் வேகமாய் பயணித்தாக வேண்டும். நிச்சயம் செய்வோம். 
 
[ தீக்கதிர் பொன்விழா மலரில் வெளியானது]