கேள்விகேட்டுக் குடைகிறாயே!

Posted by அகத்தீ Labels:





 கேள்விகேட்டுக் குடைகிறாயே!

லெமூரியாக் கண்டம்
இருந்ததா? இல்லயா?
ஓயாது கேள்வி
கேட்டுக் குடைகிறாய்..

என்முப்பாட்டன் குளித்த
குளம் இப்போது இல்லை..
என் பாட்டி துணிதுவைத்த
ஆற்றுக் கால்வாய்
இருந்த தடம் தெரியவில்லை..
அவர்கள் பயிர் செய்த
வயல்களெல்லாம்
காங்கிரீட் காடுகளாக..
ஊருணியும் ஏரியும்
அந்த அடுக்குமாடி
குடியிருப்பின் கீழே
இருந்ததாய் கேள்வி..

தண்ணீரை காசுகொடுத்து
வாங்க வெட்கப்படவில்லை.
சோற்றையும் இறக்குமதி செய்ய
பெருமையோடு காத்திருக்கிறோம்..
மூச்சுக்காற்றுக்காக
வால்மார்ட்டை எதிர்பார்க்கிறோம்..

இன்னும் உன்னிடம் காந்தி தந்த
மூவர்ணக்கொடி எதற்கு?
ஃபேஷனாய் டி சர்ட்டில்
பொறித்த அமெரிக்கக் கொடியை
கோட்டை கொடிமரத்தில்
பறக்க விடுவோம்
அடிபணிந்து
வாஷிங்டன் இருக்கும்
திக்கு நோக்கித் தொழுவோம்.

லெமூரியாக் கண்டம்
இருந்ததா? இல்லயா?
ஓயாது கேள்வி
கேட்டுக் குடைகிறாய்..
ஏனென்று சொல்லப்பா..!!!

-சு.பொ.அகத்தியலிங்கம்













சீர்திருத்த திருமணங்கள் - மேலும் சீர்த்திருத்தப்பட வேண்டும்

Posted by அகத்தீ Labels:




சீர்திருத்த திருமணங்கள் - மேலும்
சீர்த்திருத்தப்பட வேண்டும்

சு.பொ. அகத்தியலிங்கம்


[ திருமணங்கள் குறித்த இக்கட்டுரையுடன் 12-08-2012 ல் வெளியான  “ மொய்:வட்டியில்லாக் கடனா? “  http://akatheee.blogspot.in/2012/08/blog-post_17.html  என்ற கட்டுரையையும் இணைத்துப்படித்து கருத்துச் சொல்லவும்
]

ஒரே ஊரில் இரண்டு திருமணங்கள் நடந்தன. ஒன்று ஒரு சமூக
சீத்திருத்தவாதியின் இல்லத்திருமணம். இன்னொன்று அவரது கார் டிரைவரின்
இல்லத்திருமணம்.

சமூக சீர்திருத்தவாதியின் இல்லத் திருமணம் ஒரு பெரிய திருமணமண்டபத்தில்
நடைபெற்றது. ஊர் முழுக்க கொடிகள், தோரணங்கள், வண்ணவண்ண சுவரொட்டிகள்,
தலைவரை வரவேற்கும் விளம்பரத் தட்டிகள்... மண்டப வாடகையே ஒரு லட்சம்
ரூபாய். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் சுமார் ஐயாயிரம் பேர் இருப்பர்.
பல மணி நேரம் பந்தி நடந்தது. திருமணமா மாநாடா என வியக்கும் வண்ணம் ஒரே
கொண்டாட்டம். வாழ்த்தொலிகள் (தலைவருக்குத்தான் மணமக்களுக்கு அல்ல).
மாநாட்டு விருந்தின் சுவையை பலர் உச்சுக் கொட்டிப் பாராட்டினர். திருமணச்
செலவு அன்று மட்டும் சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகி இருக்கலாம். மேலும்
இருக்கலாம், யாரறிவார்?

சாதி பார்த்து, பொருத்தம் பார்த்து, எடை போட்டு தங்க நகைகள், ரொக்கம்,
கார் என வரதட்சனை வாங்கி, நாள் பார்த்து, நேரம் பார்த்துக் குறித்து
செய்யப்பட்ட திருமணம் அது. முகூர்த்தப்பட்டு மாத்திரமே ஜம்பதாயிரம்
ரூபாய். நிச்சயதார்த்தப் பட்டு 28,000 ரூபாய் எனப் பேசிக் கொண்டனர். ஒரே
ஒரு அம்சம் ஐயர் இல்லை. மந்திரம் இல்லை. மேடையில் தாலி கட்டவில்லை
(வீட்டுக்கு போனபின் விளக்கின் முன் கட்டிக் கொண்டனர்) -அவ்வளவுதான்.
திருமணம் மேடையிலேயே பதிவு செய்யப்பட்டது. தலைவர்கள் சமூக சீர்திருத்தத்
திருமணம் குறித்து நீட்டி முழக்கினர். பெண் விடுதலையைப் பற்றி தலைவர்கள்
பேசும் போது மூத்த மருமகள் பக்கத்திலிருந்த சிநேகிதி காதில்
கிசுகிசுத்தும் மாமனாரின் ஆணாதிக்கச் சிந்தனையை கிண்டலடித்து சிரித்ததும்
தனிச் செய்தி.

அடுத்து அந்த சீத்திருத்தக் வாதியின் டிரைவர் மகன் திருமணம். மறுநாள்
கோயிலில் நடந்தது. சுமார் இருபத்தைந்து பேர்கள் கலந்துகொண்டனர். பட்டுச்
சேலை சரசரக்கவில்லை. கைத்தறிக் கூரைப் புடவையில் மஞ்சள் கயிறும்
கழுத்தில் மாலையுமாய் மணமகள். வெறும் கைத்தறி வேட்டி சட்டை மாலையோடு
மணமகன் ஹோட்டலில் வாங்கிய டோக்கனை வந்திருந்தவர்கள், கையில் கொடுத்துச்
சாப்பிட அனுப்பினர். எளிய விருந்து இவ்வாறு முடிய மணமக்கள் வீடு திரும்பி
இனிய வாழ்வைத் தொடங்கினர்.

முக்கியமான செய்தி மணமகன் உயர்சாதி. மணமகள் தலித். இருவரின்
பெற்றோர்களும் வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர். வரதட்சனை எதுவும்
வாங்கவில்லை. கோவிலில் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

இந்த இரண்டு திருமணங்களும் இரண்டு செய்திகளை நமக்குச் சொல்கின்றன.
இப்போது எது சீர்திருத்தத் திருமணம் என்ற கேள்வி எழுகிறது. இந்த இடத்தில்
சற்று பின்னோக்கிப் போய், சமூக சீர்திருத்த வரலாற்றைப் பார்ப்போம்.

வைதீகத்தின் முரட்டுப் பிடியிலிருந்து திருமணங்களை மீட்டெடுக்க
பெரியாரும் ஜீவாவும் சிங்கார வேலரும் சுயமரியாதை இயக்கத்தவர்களும்
கம்யூனிட்டுகளும் அரும்பாடுபட்டனர். எடுத்த எடுப்பில் எல்லாவற்றையும்
தலைகீழாக மாற்றிவிட முடியாதுதான். மெல்ல மெல்லத்தான் பண்பாட்டுப் பழக்க
வழக்கங்களை மாற்ற முடியும். எனவே தாலிமறுப்புத் திருமணங்களும் சடங்கு
மறுப்பு திருமணங்களும் சுயமரியாதைத் திருமணங்களாக நடத்தப்பட்டன.

சமூகத்தின் பெரும் எதிர்ப்பையும் ஏச்சுகளையும் பேச்சுகளையும்
தாங்கித்தான் அதை செய்ய வேண்டி இருந்தது. கலைஞரின் நெஞ்சுக்கு நீதி
நூலில் ஆரம்பக் காலத்தில் சமூக சீர்திருத்த திருமணங்கள் செய்வதில் இருந்த
இடையூறுகளும் சவால்களும் விரிவாக இடம் பெற்றுள்ளன.
ஆயினும் இந்த திருமணங்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் இல்லை. சமுதாயம்
அங்கீகரித்தாலும் சட்டம் அங்கீகரிக்காததால் பல சிக்கல்கள் ஏற்பட்டன.

1967ல் திமுக ஆட்சியைப் பிடித்தது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.
சுயமரியாதைத் திருமணங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றது. இது அண்ணாவின் சாதனை
மகுடத்தில் பொறிக்கப்பட்ட ஒரு நட்சத்திரம் எனும் பெருமை பெற்றது.
வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சுயமரியாதைத் திருமணங்கள் அதாவது
இந்துசனாதன மரபுப்படி நடத்தாமல் தலைவர்கள் தலைமை ஏற்று நடக்கும்
திருமணங்கள் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது உண்மையில் சாதாரணச்
செய்தியல்ல. சமூக சீர்திருத்த இயக்கத்தில் ஒரு மைல்கல்தான். ஐயமில்லை.

ஆயினும் பெரியார் திருமண விழாக்களில் பேசும்போது இது மகாப்பெரிய
புரட்சிகரத் திருமணம் என்பதை ஏற்கமாட்டார். சுயமரியாதைத் திருமணம்,
சீர்திருத்தத் திருமணம் என்று சொல்வதையெல்லாம் கூட சரியில்ல என்பார்.
1956ஆம் ஆண்டின் மாதிரித் திருமணம் என்று கூறுங்கள். காலம் மாற மாற
திருமணங்கள் இன்னும் எளிமையாய் இன்னும் உனர்வுபூர்வமாய் இன்னும்
பெண்ணுரிமையை உயர்த்திப் பிடிப்பதாய் அமைய வேண்டும், என்பது பெரியாரின்
பெருங்கனவு.

எனினும் சுயமரியாதைத் திருமணத்தின் அங்கீகாரம் வழங்கும் சட்டம் முதற்படி
என்றுகூறி வரவேற்றார். இந்து திருமணச் சட்டத்தில் ஒரு பகுதியாகத்தான் இது
சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றைய சட்ட வரம்புக்குள்
அதுதான் சாத்தியமானது.

இப்போதும் வெவ்வேறு மதத்தவர்கள் திருணம் செய்துகொள்ள சிறப்புத் திருமணச்
சட்டத்தைத்தான் அணுகமுடியும். அதில் பதிவு செய்து ஒரு மாதம் காத்திருக்க
வேண்டும். இத்தகைய திருமணங்கள் பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் என்பதும்
எனவே உடனடியாகத் திருமணத்தைப் பதிவு செய்ய வழிவேண்டும் என்பது சமூக
எதார்த்தம். ஆனால் சட்டம் ஒரு மாதம் காத்திருக்கச் சொல்கிறது. அதற்குள்
மதவெறியர்கள் எதையும் செய்துவிடக்கூடும் அல்லவா?

இப்போது கட்டுரையின் ஆரம்பத்தில் விவரித்த இரு திருமண நிகழ்வுகளை
மனத்திரையில் ஓடவிட்டுப் பாருங்கள். சீர்திருத்தத் திருமணங்கள்
நீர்த்துப் போகச் செய்வதோ அல்லது கேலிப்பொருளாக மாறுவதோ எவ்வளவு
கொடுமையானது? ஆகவே, உரத்த சிந்தனை இப்போது தேவை.

இன்றையத் தேவைக்கு சுயமரியாதைத் திருமணச் சட்டம், சிறப்புத் திருமணச்
சட்டம் மட்டும் போதுமா? போதவே போதாது! அனைத்து திருமணங்களையும் பதிவு
செய்ய வேண்டும் என்ற அரசின் முடிவு சரிதான். ஆனால் அதுவும் போதாது.
போதாது. புதிய முற்போக்கான திருமணச் சட்டம் தேவை.

காதல் திருமணம், கலப்புத் திருமணம் செய்து கொண்டால். காலை வெட்டுவேன்,
கையை வெட்டுவேன், கொலை செய்வேன் என சாதி மதவெறியர்கள் கொக்கரிக்கும்
சூழலில், கவுரவக் கொலைகள் நடந்தேறும் சூழலில் சீத்திருத்தத் திருமணங்கள்
பெருக வேண்டும். அதே சமயம் அத்திருமணங்கள் மேலும் மேலும் சீர்
திருத்தப்பட வேண்டும். அன்பும் எளிமையும் கைகோர்க்க வேண்டும். அதற்கான
நிபந்தனைகள் சில உண்டுதான்.

முதல் நிபந்தனை

மணமகனுக்கும் மணமகளுக்கும் ஒருவரையொருவர் பிடித்திருக்கிறதா மனப்பூர்வமாக
சம்மதிக்கிறார்களா என்பதுதான் திருமணத்தில் முதல் நிபந்தனையாக்கப்பட
வேண்டும். சாதி, மதம், கவுரவம், அந்தது எதுவும் குறுக்கே நிற்கக்கூடாது.

இரண்டாவது நிபந்தனை

நகை, ரொக்கம், பொருட்கள், சீதனம் என எந்த ரூபத்திலும் வரதட்சனை வாங்காமல்
இருப்பதே சுயமரியாதை திருமணத்தின் அடுத்த நிபந்தனையாக இருக்க வேண்டும்.
பெண்ணின் சொத்துரிமையை இதோடு இணைத்துக் குழப்புவதோ அல்லது மறுப்பதோ கூடவே
கூடாது. வரதட்சனை எதிர்ப்பு சட்டம் வெறும் காகிதப் புலியாக அல்லாமல்
சமுதாய ஒழுக்காக மாற்றப்பட வேண்டும்.

மூன்றாவது நிபந்தனை

ஆடம்பரமான திருமணங்கள் நடத்துவது சமூக விரோதச் செயல் என்கிற மனோநிலை
சமூகத்தில் ஆழமாக வேர்விட வேண்டும். வழிகாட்டும் தலைவர்கள்
முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். எளிமையான திருமணங்களே கவுரவமானது என்ற
கருத்து வலுப்பட வேண்டும்.

சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் கலப்புத்திருமணமும் காதல் திருமணம்
பெருமைக்குரியதாய் போற்றப்பட வேண்டும். வரவேற்கப்பட வேண்டும். துணை நிற்க
வேண்டும். தோள்கொடுக்க வேண்டும்.

திருமண மண்டபங்கள் நூற்றுக்கு தொண்ணுறு
விழுக்காடு சைவ உணவை மட்டுமே அனுமதிக்கின்றன. சமூகத்தில் அசைவ உணவு
உண்போரே பெரும்பான்மையோராக இருப்பினும் சைவமே திருமணத்துக்கு உயர்ந்தது
என்பது தவறான சிந்தனை அல்லவா? அவரவர் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப எளிய
விருந்து அது சைவம் அசைவம் என வேறுபாடின்றி வழங்க மண்டபங்கள் அனுமதிப்பது
அன்றோ நியாயமாக இருக்கம்.

எல்லா திருமணமும் பதிவு செய்யப்படுவது மதச் சார்பற்ற திருமணங்கள் - சாதி
மறுப்பு - சடங்கு மறுப்பு திருமணங்கள் - பெண்ணுரிமை போற்றும் திருமணங்கள்
பல்கிப் பெருக உரிய சட்டம் வேண்டும். வெறும் சட்டம் பயன்தராது.
சமூகவுணர்வாக அது மாற்றப்பட வேண்டும்.

மொத்தத்தில் சுயமரியாதைத்
திருமணங்கள் இன்றைய நவீன உலகுக்கு எற்ப மேலும் பலபடி முன்னேற வேண்டும்.
அதற்கொப்ப மனந்திறந்த பகிரங்க விவாதங்களும் விமர்சனங்களும்
பிரச்சாரங்களும் கட்டவிழ்த்துவிடப்பட வேண்டும். குறிப்பாக இடதுசாரிகள்
முன் இந்தப் பணியும் இருக்கிறது.

நன்றி:30-09-2012 தீக்கதிர்-வண்ணக்கதிர்

நன்றி!போய் வா!

Posted by அகத்தீ Labels:




  •  
    நன்றி!போய் வா!


    பிறந்த நாள் காணும் பிள்ளையாரே
    லஞ்சம் கொடுக்காமல்
    பிறப்புச் சான்றிதழ் வாங்க முடியுமா உன்னால்?

    இருப்பிடச் சான்றிதழாவது
    யார் தயவுமின்றி வாங்க முடியுமா உன்னால்?

    உனக்கு ஊருக்கு ஒரு பெயர் வைத்து-நீ
    பாஸ்போர்ட் வாங்குவதையும்
    சிக்கலாக்குகிறார்களே உன் பக்தர்கள்..

    இந்த பக்தர்களிடம்
    எச்சரிக்கையாய் இரு விநாயகா!

    நீ
    கலகசாமி இல்லை என
    காவிகளுக்குச் சொல்!

    நீ
    போலிசாமியல்ல என
    பிள்ளைவரம் கேட்பவர்களிடம் சொல்

    நீ
    வினாத்தாள் விற்பனை சாமி இல்லை என
    தேர்வில் வெற்றி கேட்பவர்களிடம் சொல்!

    நீ
    கள்ளச் சாமிஅல்ல என
    கஜனாவை நிரப்ப வேண்டிடும்
    வியாபாரிகளுக்குச் சொல்!

    நீ
    மெளனசாமியாய் இருப்பினும்
    பேசத்தொடங்கிவிட்டால்
    சிக்கல் என்பதால் அல்லவா
    உன்னைக் கடலில் கரைக்கிறார்கள்.

    உன்னை உருவாக்கிய
    உழைப்பாளிக்கு
    இன்றொரு நாள்
    உணவளித்தாய்
    அதற்கு நன்றி!போய் வா!

    சு.பொ.அகத்தியலிங்கம்

சமூகவலைதளங்கள் நோக்கி எல்லோர் பார்வையும்..

Posted by அகத்தீ Labels:







தந்தி எப்போதும் வேகமாகப் பரவும். அதையே ஒரு நோக்கத்தோடு திட்டமிட்டு  ஒரு குழுவினர் பயன்படுத்தும்போது மிகவும் நுட்பமான விளைவுகளை உருவாக்கிவிடும்.

இணையதள வசதி ஆரம்ப நிலையிலிருந்த 1995 செப்டம்பர் மாதம் பிள்ளையார் சிலைகள் பால குடிக்கின்றன என்கிற வதந்தி லடககணக்கான மக்களை உண்மை என நம்பவைத்தது.ஆயிரக்கணக்கான கோயில்களில் மணிக்கணக்கில் மக்கள் கீயூவில் நின்றனர்.மெத்தப்படித்தவர்களும் இதில் விதிவிலக்கல்ல.மக்களை தெளியவைக்க அறிவியலாளர்கள் பெரும்பாடுபட வேண்டியிருந்தது.
.
வதந்தியை உருவாக்கிப் பரப்பியது இந்துத்துவ மதவெறிக்கூடாரமே.இந்து முன்னணியினர் இது எங்கள் மத நம்பிக்கை,இதனை கேலி செய்யக்கூடாது என வாதிட்டனர்.உண்மையை அம்பலப்படுத்திய அறிவியலாளர்கள் மீது அவதூறு பொழிந்தனர்.பிள்ளையாரை வைத்து கலவரம் தூண்டவும் மதவெறி அரசியல் நடத்தவும் அவர்களுக்கு மூடபக்தியை உருவாக்கும் வதந்தி தேவையாக இருந்தது.

வதந்தியின் வலிவை ஆட்சியாளர்களும் அரசியல் கட்சிகளும் உணரத்தலைப்பட்டனர். மூடநம்பிக் கைகளை வலுப்படுத்தும் வதந்திகள் அடிக்கடி வலம்வருவதின் பின்னால் இந்துத்துவ மதவெறிக் கூட்டத்தின் கரசேவை உள்ளதை அறியவேண்டும்.

சமீபத்தில்,வடகிழக்கு மாநிலத்தவர் தாக்கபடக் கூடும் என்ற வதந்தி பரவ தென்மாநிலங்களிலிருந்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு கூட்டம்கூட்டமாக திரும்ப - ரயில் நிலையங்கள் கிட்டத்தட்ட அகதி முகாம்கள் போலாயின.ஆனால் இந்த வதந்தி பாகிஸ்தானில் இருந்து சமூகவலைதளங்கள் மூலம் பரப்பப்பட்டதாக கண்டுபிடித்துக்கூறி அதற்கு அரசு முற்றுபுள்ளி வைத்தது.அது உண்மையில் பாகிஸ்தானில் இருந்துதான் பரப்பப்பட்டதா?யாரும் உறுதி செய்யவில்லை.ஆயினும் இந்திய பொதுபுத்தியில் பதியம் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய துவேஷம் மேலும் வலுப்படுத்தப் பட்டது.மருதாணியால் அரிப்பு என்ற வதந்தி ரம்ஜான் நெருக்கத்தில் பரவ பதட்டம் அதிகமானது.இப்போதும் ஒரு முஸ்லீம் பெண்ணை கைது செய்து பிரச்சனை முடிக்கப்பட்டது.இங்கேயும் நஞ்சாகிப்போன இந்திய பொதுபுத்தி சுயரூபம் காட்டியது.முஸ்லீம் அல்லாத வடகிழக்கு மாநிலத்தவர் பாதிக்கப்பட்ட போதும் பழி இஸ்லாமியர் மீதே,இஸ்லாமியர்கள் பாதிக்கும்போதும் பழி இஸ்லாமியர்கள் மீதே.எங்கோ உண்மை இடிக்கிறதே!

சமூகவலைதளங்கள் விஷம் பரப்புவதாக அரசே கூறி அவற்றுக்கு தடைவிதிக்கப் போவதாகக் கூறின.சில நாட்கள் மொத்தமாகக் குறுஞ் செய்தி அனுப்பத் தடையும் விதிக்கப்பட்டது.தொழில் நுட்பரீதியாக இவை எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது ஒருபுறம் இருக்க - இன்றைய ஊடகங்களும் தகவல் தொழில் நுட்ப சாதனங்களும் எவ்வளவு வலுவாகவும் விரைவாகவும் செயல்படுகின்றன என்பது பிரமிக்க வைக்கிறது.

வதந்திக்கும் செய்திக்கும் பல நேரங்களில் வித்தியாசம் காண்பது சிரமமாக இருக்கிறது. கருத்துத் திணிப்பே செய்திவழியாக அரங்கேறுகிறது.அச்சு ஊடகங்கள்,தொலைகாட்சிஅலைவரிசைகள்,சமூகவலைதளங்கள்,வலைப்பூக்கள்,மின்னஞ்சல்கள்  இன்றைய பிரச்சார முறை மாறிவிட்டத.

ஃபேஸ்புக், டுவிட்டர் மூலமே சமீபத்திய அரபு வசந்தம் எனப்படும் எழுச்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.இதில் எந்த அளவு உண்மை உள்ளதென்பது இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை.மக்களிடம் தலைமறைவாக ஊடுருவிய இயக்கங்கள் ஃபேஸ்புக்,டுவிட்டர்களை பயன்படுத்திக் கொண்டன என்பதைச் சொல்ல இன்னும் தயக்கம் உள்ளது.
எது எப்படியோ மக்களோடு வீட்டுக்குள் நுழைந்து நேரடியாகப் பேசுகிறது இந்த சமூகவலைதளங்களும், தொலைகாட்சிகளும்,பத்திரிகைகளும்
.இது குரங்கு கை கொள்ளியா? இருட்டில் தடுமாறாமல் வழிகாட்டும் தீப்பந்தமா?விவாதிக்க வேண்டும்தான்.அதைவிட முக்கியம் அதைப் பயன்படுத்தவேண்டும்.

முன்னாள் மத்தியஅமைச்சரும்,அரசியல் விமர்சகருமான அருண்நேரு அண்மையில் தினமணியில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் “புள்ளிவிவரங்களில் நான் கெட்டிக்காரன் அல்ல என்றாலும் 2014 பொதுத் தேர்தலில் செய்தி ஊடகங்களுக்காகக் கட்சிகள் செய்யும் செலவு 200 விழுக்காடு ஆக உயர்ந்துவிடும் என்று கணிக்கிறேன்.” என்கிறார்.

மேலும் அவர் சொல்கிறார்,“பத்திரிகைச் சுதந்திரத்தின் அவசியம், சமூக வலைதளங்களின் பயன்பாடு ஆகியவை குறித்து லட்சக்கணக்கான வார்த்தைகள் இனி அச்சிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து இடம் பெறும்...  தவறான தகவல்களை வேண்டுமென்றே வெளியிடும் வலைதளங்களைத் தடை செய்துவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டாலும் உலகின் எந்தப் பகுதியிலாவது, யாராவது அதை வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறார்களா? ....நாட்டின் நிர்வாக விதிகள் அனைத்தும் மாறிவிட்டன; அது 24 மணி நேர செய்தி சேகரிப்பாக இருந்தாலும், சமூக வலைதளங்களாக இருந்தாலும், தொழில்நுட்பக் கருவிகளின் பயன்பாடாக இருந்தாலும், நம்மை நிர்வகிக்கும் அரசுமுறையாக இருந்தாலும், நீதிவழங்கும் தீர்ப்பாக இருந்தாலும் - எல்லாமும் - மாறிவிட்டன. பதவியில் இருப்பவர்கள்தான் ஏதும் மாறாததைப்போல மறுத்துப் பேசிவருகின்றனர். இப்போதைய சூழலில் எது சரி, எது தவறு என்று நமக்குத் தெரியவில்லை. கழுத்து வெட்டப்பட்ட கோழியைப்போல நாம் வட்டமடித்துச் சுற்றிசுற்றி வருகிறோம்.”

எது எபடியானாலும் சமூகவலைதளங்கள் கருத்துப்போரில் மிக முக்கிய பங்கு வகிக்கப் போகின்றது அதை தடுத்து நிறுத்த இயலாது. ஆகவேதான் ராகுல்காந்தி, லல்லு,அத்வானி,மோடி,  மம்தா, கருணாநிதி,என ஒவ்வொருவரும் சமூகவலை தளங்களுக்கு வருகின்றனர்.
மக்கள் மீது யுத்தம் தொடுத்துவிட்டு டுவிட்டரில் அதனை நியாயப்படுத்தி எழுதுதுகிறார் பிரதமர் மன்மோகன்சிங்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலையை வலுவாக எடுத்துச் செல்லவேண்டும் என்று சோனியா காந்தி தம்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்டளையிடுகிறார்.

திருணாமுள் காங்கிரஸின் பெருமைகளை சமூகவலைதளங்களில் உயர்த்திப் பிடிப்பது உங்கள் பணியாகட்டும் என்று மம்தா தன் கட்சி இளைஞர்களுக்கு அறைகூவல்விடுகிறார்.

பத்திரிகைகளில் ஆசிரியர் கடிதம் எழுதுவது முதல் சமூகவலைதளங்களில் பொதுமனிதத் தோரணையில் முகமூடியணிந்து கருத்துபரப்புதல்வரை அனைத்தையும் திட்டமிட்டு செய்ய தன் பரிவாரங்களுக்குப் பயிற்சி அளித்து வழிகாட்டடுகிறது ஆர்.எஸ்.எஸ்.

சமீபகாலமாக சில இஸ்லாமிய அமைப்புகளும் அன்பர்களும் வலைதளத்தில் செயல்படுகின்றனர்.ரம்ஜான் நேரத்தில் நோண்பின் பெருமை,நோண்புகால சமையல்,குரான் மேன்மை,இஸ்லாமிய வாழ்வியல் என குவித்த மின்னஞ்சல்களும் வலைதள செய்திகளும் அவர்கள் இவற்றைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர் என உணர்த்துகின்றன.அதே சமயம் இவர்களின் வலைதளங்கள் குறிவைக்கப்படுகின்றன.

தமிழில் வலைதள செயல்பாடு பெரிதும் தமிழீழம் சார்ந்தே உள்ளது.அவதூறும்,குழாயடிச் சண்டையும் நிரம்பி வழிகிறது.உணர்ச்சியைக் கொம்பு சீவுவதில் காட்டும் அக்கறையில் - தனிமனிதர்களைத் துதிபாடவும் அல்லது சிறுமைப்படுத்தவும் காட்டுகிற அக்கறையில் பத்தில் ஒருபாகம்கூட அறிவுபூர்வமான விவாதங்களுக்கோ விவரங்களுக்கோ ஒதுக்கப்படுவதில்லை.

இந்துத்துவ சக்திகள் சந்தடிசாக்கில்  திராவிட கட்சிகளை,தலைவர்களை விமர்சிக்கிற போக்கில் மொத்த சமூகசீர்திருத்த கருத்துகளையும் இழிவு செய்கிறது.

அதிதீவிர குழுக்கள் சகட்டுமேனிக்கு எல்லோரையும் திட்டித் தீர்க்கிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சிறுமைப்படுத்த-கொச்சைப்படுத்த ஒரு படையே செயல்படுகிறது.

இவற்றுக்கு மத்தியிலும் சிலர் இடதுசாரிக் கருத்துகளை முன்னிறுத்த மாற்றுப் பாதையை முன்னிறுத்த விடாது முயல்வது பாராட்டுக் குரியது.ஆனால் போதாது.

இந்த சமூகவலைதளங்கள் ஆகப்பெருவாரியான மக்களின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை என்பது தற்போதைய யதார்த்தமே.எனினும்,பாட்டாளி மக்களிடம்,சாதாரண மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் வாகனம் மத்தியதர வர்க்கம் என மார்க்ஸ் சரியாகக் கணித்ததை மறந்துவிடக்கூடாது.இந்த மத்தியதர வர்க்க்த்தை தன்பக்கம் வென்றெடுக்க சுரண்டும் வர்க்கம் இந்தவலைதளங்களைத் திறமையாகப் பயன்படுத்துகின்றன.சமூக கருத்துருவாக்கத்தில் இப்படி தலையிடுகின்றன.எனவே சமூகவலைதளங்கள் குறித்து நாம் கவலை கொண்டாக வேண்டும்.

இஸ்கரா பத்திரிகை பற்றி லெனின் கூறும்போது உலகிலேயே அதிக நிருபர்களைக் கொண்டது இஸ்கரா என்றார்.ஏனெனில் ஒவ்வொரு தொழிலாளியும் வாசகர் மட்டுமல்ல,செய்தியைத் தரும் நிருபரும் என்றார்.இப்போது எல்லாதுறையிலும் எல்லாவெளியிலும் இடதுசாரி சிந்தனை கொண்ட படித்த தோழர்கள் உண்டு.வங்கி,இன்சுரன்ஸ்,ஆசிரியர்,அரசு ஊழியர்,மத்திய அரசு ஊழியர்,பொதுத்துறை ஊழியர் ,மாணவர்கள்,இளைஞர்கள் எனக் கணினியோடு இயங்குகிற எண்ணற்றத் தோழர்கள் உண்டு.இவர்கள் எல்லோரும் சமூகவலைதளங்களின் தேவை உணர்ந்து,வீச்சை புரிந்து களத்தில் இறங்கினால் இடதுசாரிக் கருத்துகள் வேகம் பெறுமே.

இந்த இடத்தில் ஒரு செய்தியைப் பதிவு செய்வது அவசியம்.ஒரு முறை ஒரு பிரபல வார இதழின் ஆசிரியரோடு ஒரு நிகழ்வில் பங்கேற்க நேர்ந்தது.அப்போது அவரிடம் நீங்கள் நேரில் பேசுகிறபோது தெரிவிக்கிற இடதுசாரி சாய்வுகூட உங்கள் ஏடுகளில் பிரதிபலிப்பதில்லையே ஏன் எனக் கேட்டேன். அவர் சொன்னார் பாஜக சார்பக ஒரு கட்டுரைவந்தால் பாராட்டி நூறு கடிதம் வரும்.நூறு தொலைபேசி வாழ்த்து வரும்.தலைவர்களே  அழைத்துப் பாராட்டுவர்.அது போல் அவர்களை விமர்சிக்கிறபோதும் எதிர்வினையிருக்கும்.ஆனால் இடதுசாரிகளான நீங்களோ பாரட்டுவதே இல்லை.விமர்சனக் கடிதங்களும் கிட்டத்தட்ட வராது.கிணற்றில் போட்ட கல்லாட்ட்ம் இருக்கும் .நாங்கள் வியாபாரிகள். உங்கள் வாசகர் பரப்பை நாங்கள் எப்படி அறிவோம் பின் எப்படி உங்களை சுமப்போம். என்றார்.அவரின் பதில் நம் சிந்தனைக் குரியது.

ஆர்,எஸ்.எஸ்.ஊடகத்துறையில் திட்டமிட்டு ஊடுருவுகிறது.வாசகர் கடிதம்,வலைதளங்களில் பின்னூட்டம் என எல்லாவகையிலும் கால்பரப்புகின்றனர்.அது தவறென்று குற்றம் சாட்ட முடியாது..ஆனால் இடது சாரிகருத்துடையோர் மவுனம்தான் தவறானது.இனியும் வேண்டாம் அந்த மவுனம்.

கணினி பொத்தான்களில் உங்கள் விரல்கள் தாளமிடட்டும். கோடிக்கால் பூதமாக எல்லோரும் இறங்குங்கள்.பாராட்ட வேண்டியதை பாராட்டுங்கள்.எதிர்வினை ஆற்றவேண்டிய இடத்தில் எதிர்வினை ஆற்றுங்கள்.குழாயடி சண்டை, எள்ளல், ஏகடியம்,அவதூறு, கொச்சைப் படுத்தல்,கொள்கைப்போர் அனைத்திலும் கச்சைகட்டி களத் தில்-வலைதளத்தில் நிற்காமல் சமூகமாற்றத்துக்கான கருத்துப்போர் முடிவுறாது.நம்மால் முடியும்.நம்மால்தான் முடியும்.நாம் கோடிக்கால் பூதம் அல்லவா?

சு.பொ.அகத்தியலிங்கம்.

[28-08-2012 அன்று எழுதிய கட்டுரை இது.இதுவரை  பிரசுரமாகவில்லை.இன்று 16-09-2012 அன்று வெளியிடும்போது மன்மோகன் குறித்து ஒருவரி சேர்த்துள்ளேன்.]

இடும்பைகூர் அலைபேசி..

Posted by அகத்தீ Labels:





 இடும்பைகூர் அலைபேசி..

அலைபேசி,கைபேசி
செல்.மொபைல் - உன்
பெயர் எதுவானால் என்ன?
பிரச்சனை பிரச்சனைதான்

உன்னோடு
வாழ்வும் முடியவில்லை
நீ இன்றி
வாழவும் முடியவில்லை..

அரக்கப் பரக்கவேலைசெய்து
கொண்டிருக்கும்போதும்...
அவசரமாக கழிப்பறையில்
ஒதுங்கும்போதும்...
பசி பொறுக்காமல்
உணவுக் கவளத்தை
விழுங்கும்போதும்..
ஒலி எழுப்பி
நிம்மதி கெடுக்கிறாய்..

உரையாடலை முறிக்கிறது
உன் டயல் டோண்..
தொடர்புஎல்லைக்கு வெளியே
இருப்பதாய்க் கூறி
உறவையே முறிக்கிறாய்

நீ இன்றி
எந்த ரகசியமும் இல்லை
உன்னிடம்
எதுவும்
ரகசியமாய் இல்லை..

கடன்காரன்
அழைக்கும்போது
சட்டென இணைக்கிற நீ
தேவையான நேரத்தில்
கிட்டாமலே வெட்டியும் விடுகிறாய்..

படம் பிடிக்கிறாய்
பாட்டும் படிக்கிறாய்
போட்டும் கொடுக்கிறாய்

நீ கூட இருந்தால்
கூட்வே ஒரு ஆள்
துணை இருப்பதாய்
ஒரு ஐதீகம்..
ஆனால்
கூடவே ஒரு
ஒற்றன் இருப்பதை
அனுபவம் சொல்லும்


இடும்பை கூர்
அலைபேசி
உன்னோடு வாழ்வதரிது
நீஇன்றியும்
வாழ்க்கை அரிது..
என் செய்வேன்
நோக்கியோனே

சு.பொ.அகத்தியலிங்கம்